இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், தனது ரோல் மாடலும், பேட்டிங் ஜாம்பவானுமான விராட் கோலியின் கடைசி டெஸ்ட் போட்டி ஜெர்சியை தனது ஹைதராபாத் வீட்டில் பிரேம் போட்டு வைத்துள்ளார். கோலி இந்த ஆண்டு மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
அவரது இறுதி டெஸ்ட் போட்டி, 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியாக சிட்னியில் நடைபெற்றது. அந்தப் போட்டியில், மெக்ராத் அறக்கட்டளையின் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முயற்சியை ஆதரிக்க, இரு அணிகளும் இளஞ்சிவப்பு நிற ஜெர்சிகளை அணிந்தன.
கோலி உடனான நட்பு:
குறிப்பாக, சிராஜ் வைத்திருந்த ஜெர்சியில் கோலியின் கையொப்பம் உள்ளது.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரில் ஒன்றாக விளையாடிய காலத்தில், கோலி முதன்முதலில் இளம் வேகப்பந்து வீச்சாளரான சிராஜை ஆதரித்ததால், இருவரும் நல்ல நட்பை பகிர்ந்து கொள்கின்றனர். அனைவரும் சிராஜ் திறமை மீது சந்தேகம் எழுப்பிய போது எல்லாம் கோலி மட்டும் தான் உறுதுணையாக இருந்தார்.
இந்த சூழலில் தான் வைரலான புகைப்படத்தில், சிராஜ் தனது நண்பருடன் சாதாரணமாக ஒரு சோபாவில் அமர்ந்திருந்தார். சிராஜின் அருகில் சுவரில் இருந்த பிரேம் போட்ட ஜெர்சி பெரும் கவனத்தை ஈர்த்தது. இதன் மூலம் கோலி மீது எவ்வளவு மரியாதை இருந்தால், சிராஜ் இப்படி ஒரு காரியத்தை செய்திருப்பார் என்று பலரும் நெகிழ்ந்து வருகின்றனர். சமீபத்தில், இங்கிலாந்துக்கு எதிரான ஓவலில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியில் சிராஜ் இந்தியாவின் ஹீரோவாக திகழ்ந்தார்.
சிராஜை வாழ்த்திய கோலி:
கடைசி நாளில் வெறும் 35 ரன்களை பாதுகாக்க, சிராஜ் இங்கிலாந்தின் கீழ் வரிசை பேட்ஸ்மேன்களை வீழ்த்தி, அந்த இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும், போட்டியில் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அவரது முயற்சிகள் அவருக்கு ஆட்டநாயகன் விருதைப் பெற்றுத் தந்தன இதன் மூலம், இந்தியா ஆண்டர்சன்-டெண்டுல்கர் தொடரை 2-2 என சமன் செய்ய உதவியது.
இதையும் படிங்க: இந்திய அணிக்கு பல சிராஜ்கள் தேவை.. உண்மையான சூப்பர் ஹீரோ அவர்.. கபில்தேவ் பாராட்டு
குறிப்பாக, ஜஸ்பிரீத் பும்ரா இல்லாத நிலையில், சிராஜ் வேகப்பந்து வீச்சு தாக்குதலை வழிநடத்தினார், தொடரில் 23 விக்கெட்டுகளுடன் முன்னணி விக்கெட் வீழ்த்தியவராக முடித்தார். இது தொடர்பாக சிராஜை பாராட்டிய கோலி, “இந்திய அணியின் அற்புதமான வெற்றி. சிராஜ் மற்றும் பிரசித் ஆகியோரின் உறுதியும் தீர்மானமும் இந்த அபார வெற்றியை வழங்கியது. அணிக்காக எல்லாவற்றையும் அர்ப்பணிக்கும் சிராஜுக்கு சிறப்பு பாராட்டு. அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்று கோலி கூறினார்.






