இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.
இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியான ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து, புள்ளி பட்டியலில் 10 புள்ளிகள் உடன் முதல் இடத்தை கைப்பற்றி இருக்கிறது. நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
இன்றைய போட்டியில் இந்தியா டாசை வென்று நியூசிலாந்தை பேட்டிங் செய்ய சொல்ல, நியூசிலாந்து அணிக்கு இந்திய வீரர்கள் சில எளிய கேட்ச் வாய்ப்பை தவறவிட, நியூசிலாந்து 300 ரன்கள் தாண்டி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இப்படியான நிலையில் இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசி பத்து ஓவர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்து அணியை 273 ரன்களுக்கு கட்டுப்படுத்தினார்கள். இதன் காரணமாக இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மீதான நெருக்கடி குறைந்தது.
இதற்கடுத்து விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி மூலம் நல்ல துவக்கம் கிடைத்தது. ஆனால் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் நான்கு விக்கெட்டுகள் இந்திய அணிக்கு விழுந்த காரணத்தினால் அழுத்தம் உருவானது.
இப்படியான சூழ்நிலையில் அதிகம் விளையாடி பழக்கப்பட்ட விராட் கோலி களத்தில் நின்று ஜடேஜா உடன் சேர்ந்து 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, அவர் 95 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்து வெளியேறினார்.
இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிய காரணமாக இருந்தது விராட் கோலியை விட பந்துவீச்சில் 5 விக்கெட் கைப்பற்றிய முகமது சமிதான். எனவே அவருக்கே இன்றைய போட்டிக்கான ஆட்டநாயகன் விருதும் கொடுக்கப்பட்டது.
இந்த போட்டி குறித்து டிவீட் செய்துள்ள ஷேவாக் கூறும்பொழுது “மிகப்பெரிய வெற்றி. கிங் கோலி பிரம்மாண்டமான முறையில் அதை செய்தார். ஆனால் ஷமியின் பந்து வீச்சுதான் நியூசிலாந்தை 273 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. எங்களுக்கு மிக நெருக்கமான போட்டி மற்றும் அற்புதமான வெற்றி!” என்று கூறியிருக்கிறார்!
Great win. King Kohli doing it in grand style but it was an outstanding spell from Shami that restricted NZ to 273. Closest match for us and a wonderful win. pic.twitter.com/FVyRHOzFjt
— Virender Sehwag (@virendersehwag) October 22, 2023






