“இது ஒரு கூட்டு தோல்வி!” – கேப்டன் ரோஹித் சர்மா புது விளக்கம்!

0
820
Rohitsharma

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு அடுத்து இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முடிவுக்கு வந்து இருக்கிறது!

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் ஆளுக்கு ஒரு போட்டியை வென்று தொடர் சமநிலையில் இருந்தது. இன்று தொடரை யாருக்கு என்று முடிவு செய்யும் தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாஸில் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி மிட்சல் மார்ஷ் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்த 49 ஓவர்களுக்கு 269 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் மிகச் சிறப்பாக பந்து வீசிய ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 30, சுப்மன் கில் 37, விராட் கோலி 54, கே எல் ராகுல் 34, ஹர்திக் பாண்டியா 40 ஆகியோர் நல்ல பங்களிப்பை தந்தாலும், அக்ஷர் பட்டேல் ரன் அவுட் ஆனது, சூரியகுமார் யாதவ் மூன்றாவது முறையாக முதல் பந்திலேயே டக் அவுட் ஆனது, ரவீந்திர ஜடேஜா ஆட்டம் இழந்தது என, சில விரும்பத்தகாத ஆட்ட இழப்புகளால் இந்திய அணி 49.1 ஓவரில் 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி ஆட்டத்தை வென்று தொடரையும் வென்றது. மிகச் சிறப்பாக பந்து வீசிய ஆடம் ஜாம்பா நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தோல்விக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா
” இது சேஸ் செய்ய முடியாத அதிக ரன் என்று நான் நினைக்கவில்லை. இரண்டாவது பாதி ஆட்டத்தில் பேட்டிங் செய்ய விக்கெட் கொஞ்சம் சவாலாக இருந்தது. நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. பார்ட்னர்ஷிப்புகள் அவசியம் இன்று நாங்கள் அதை செய்ய தவறி விட்டோம். நீங்கள் இந்த மாதிரியான விக்கட்டுகளிலேயே பிறந்து வளர்ந்து உள்ளீர்கள். ஆனாலும் இந்த மாதிரி முறையில் ஆட்டம் இழப்பது சரி இல்லை!” என்று கூறியுள்ளார்

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா ” சில சமயங்களில் நீங்களே உங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு நீங்களே ஒரு வாய்ப்பு கொடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பேட்டர் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும். ஆனால் நாங்கள் அனைவரும் முயற்சி செய்தோம். ஆனால் அது நடக்கவில்லை. ஜனவரியில் இருந்து நாங்கள் ஒன்பது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் விளையாடியுள்ளோம். அதிலிருந்த நல்ல பாசிட்டிவான விஷயங்களை நாங்கள் எடுத்துக் கொள்வோம். இது ஒரு கூட்டு தோல்வி. உலகக் கோப்பைக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ளது நாங்கள் திரும்ப இந்த சூழ்நிலையில் வந்து விளையாட. மேலும் இந்த வெற்றிக்கு ஆஸ்திரேலியாவுக்கு நாம் பாராட்டுகளை கொடுக்க வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!