தோனி ஓய்வு பெறுகிறார் என சொல்லாமல் சொல்கிறார்களா? – “நன்றி கேப்டன்” என தோனிக்கு உருக்கமான விடியோவை வெளியிட்ட சிஎஸ்கே நிர்வாகம்!

0
2889

திடீரென தோனிக்காக உருக்கமான வீடியோவை சிஎஸ்கே அணி நிர்வாகம் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது. தோனி ஓய்வு பெறுகிறார் என சொல்லாமல் சொல்லும் என ரசிகர்கள் பலர் இதற்கு கேள்வி எழுப்பி உள்ளனர்.

நடைபெற்று முடிந்த 2023 ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறது.

- Advertisement -

கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இந்த கோப்பையை சமர்ப்பிக்கிறோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் பலர் தங்களது பேட்டியின்போது குறிப்பிட்டனர். கடைசி ஓவரில் சிக்ஸ் மற்றும் பவுண்டரி அடித்து வெற்றிக்கு உதவிய ஜடேஜாவும் இதனை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீசன் முழுவதுமே மகேந்திர சிங் தோனி இடது காலின் முட்டி பகுதியில் காயம் இருந்தது. அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டே வலியுடன் கீப்பிங் செய்தார் மற்றும் பேட்டிங்கில் கடைசி ஓரிரு ஓவர்கள் மட்டுமே களமிறங்கி விளையாடி வந்தார்.

ஐபிஎல் கோப்பை வென்ற அடுத்த நாளே மும்பை சென்ற தோனி, தனது காலின் காயத்திற்குசிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு விட்டு ராஞ்சி சென்று இருக்கிறார். இது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விசுவநாதன் தனது பேட்டியில் பேசியதையும் காணமுடிந்தது.

- Advertisement -

இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு இரண்டு மாதங்கள் முழு ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான பிசியோதெரபி மற்றும் உடற்பயிற்சிகளை மகேந்திரசிங் தோனி செய்கிறார் என்கிற தகவல்களும் வருகின்றன.

இந்த ஐபிஎல் சீசனின் துவக்கத்தில் இருந்தே தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் என்று பலரும் கூறிவந்த நிலையில், கோப்பையை வென்றபின் பேட்டியளித்த தோனி கூறியதாவது: ” எனக்கு அன்பு செலுத்திய ரசிகர்களுக்கு நான் பரிசளிக்க விரும்புகிறேன். அவர்களுக்கு நான் கொடுக்கும் பரிசு அடுத்த சீசனில் விளையாடுவது தான். காயத்துடன் இருக்கும் எனக்கு அது அவ்வளவு எளிதல்ல என்றாலும், நான் முடிந்தவரை முயற்சிப்பேன்.” என்கிறவாறு தனது கடைசி பேட்டியில் பேசினார்.

ஆகையால் தோனி அடுத்த சீசனில் வருவார் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இதற்கிடையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் தனது சமூக வலைதளபக்கத்தில் தோனிக்கு உருக்கமான வீடியோ ஒன்றை இன்று பதிவிட்டு “எங்களது கேப்டன்” என்று குறிப்பிட்டிருந்தது.

தோனி எப்போதும் யாரும் எதிர்பாராத நேரத்தில் தனது ஓய்வு முடிவு அறிவிக்கக்கூடியவர். ஆகையால் இதுவும் ஓய்வு முடிவு அறிவிப்பதற்கான அறிகுறியா? என்று ட்விட்டர் பக்கத்தில் பலரும் கேள்விகளை எழுப்பி உருக்கமாக தங்களது பங்கிற்கு பதிவிட்டு வருவது டிரெண்டாகி வருகிறது