2022 ஐபிஎல் தொடரில் சிறந்த 11 வீரர்கள் கொண்டு இர்பான் பதான் தேர்ந்தெடுத்துள்ள அணி – ஒரு சென்னை, மும்பை வீரர் கூட இல்லை

0
228
Irfan Pathan

2022ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரின் இறுதிபோட்டி, நேற்று முன்தினம் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரின் நரேந்திர மோதி மைதானத்தில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நடனம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரியோடு ஆரம்பித்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே நடந்து முடிந்திருக்கிறது.

இந்தப் போட்டியில் இந்த ஐ.பி.எல் தொடருக்கு புதிய அணியாக வந்திருந்த குஜராத் அணி வென்று இந்த ஆண்டின் ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் ஆனது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணியில் குஜராத் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொண்டு 130 ரன்களே எடுக்க முடிந்தது. அடுத்து விளையாடிய குஜராத் அணி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி சாம்பியன் ஆனது.

- Advertisement -

இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற மெகா ஏலத்தின் முடிவுக்குப் பிறகு, கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் குஜராத் அணிக்குக் கடைசி இடத்தையே வழங்கி இருந்தார்கள். ஆனால் எல்லோரது கணிப்பையும் தவிடு பொடியாக்கி இருக்கிறது குஜராத் அணி!

பத்து அணிகள் பங்கேற்ற இந்த ஐ.பி.எல் தொடரிலிருந்து தனது அணி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இர்பான் பதான். இவர் தனது இந்த ஐ.பி.எல் அணிக்கு, இந்த ஆண்டின் சாம்பியன் அணியான குஜராத் அணியை வழிநடத்திய ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாகவும், இறுதிபோட்டிக்கு முன்னேறிய ராஜஸ்தான் அணியை வழிநடத்திய சஞ்சு சாம்சனை விக்கெட் கீப்பராகவும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

இர்பான் பதான் தனது ஐ.பி.எல் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக, இந்த ஆண்டு அதிக ரன் குவித்த ஜோஸ் பட்லரையும், அதற்கடுத்து அதிக ரன் குவித்த லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலையும் வைத்திருக்கிறார். அதற்கடுத்து ராஜஸ்தான் அணிக்கு பேட்டிங்கில் மூன்றாவதாக வந்த சஞ்சு சாம்சனையும், குஜராத் அணிக்காக பேட்டிங்கில் நான்காவதாக வந்த ஹர்திக் பாண்ட்யாவையும் மூன்றாவது நான்காவது இடங்களுக்குத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

- Advertisement -

மேலும் பஞ்சாப் அணிக்காக அதிரடியில் மிரட்டிய லியாம் லிவிங்ஸ்டனை ஐந்தாவது இடத்திலும், குஜராத் அணிக்காக பேட்டிங்கில் ஐந்தாவது வீரராகக் களமிறங்கி அசத்திய டேவிட் மில்லரை ஆறாவது இடத்திலும் வைத்து, ஏழாவது இடத்தில் ஒரு ஆல்ரவுண்டராகவே சுழற்பந்து வீச்சாளர் ரசீத்கானை வைத்திருக்கிறார்.

மீதம் உள்ள நான்கு இடங்களில் எட்டாவது இடத்தில் மிடில் & டெத் ஓவர் பாஸ்ட் பவுலிங் ஸ்பெசலிஸ்ட் ஹர்சல் படேலையும், ஒன்பதாவது இடத்தில் ஸீம் பாஸ்ட் பவுலிங்கில் அசத்தும் மொகம்மத் ஷமியையும், பத்தாவது இடத்தில் இந்த ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி பர்பிள் நிற தொப்பியை வென்ற யுஸ்வேந்திர சஹாலையும், பதினோராவது இடத்தில் இந்தியாவின் அதிவேக பவுலர் உம்ரான் மாலிக்கையும், பனிரென்டாவது வீரராக சைனாமேன் பவுலர் குல்தீப் யாதவையும் வைத்திருக்கிறார்!