விளையாட்டு என்பது உடல் திறன் அளவில் நடத்தப்படும் ஒன்று என்றாலும் மாற்றுத்திறனாளிகளுக்காகவும் அவர்களது திறமையை உலகிற்கு காட்டும் வகையிலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்றே கண் பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகளும் உலக அளவிலும் இந்திய அளவில் நடைபெற்று வருகிறது.
தற்போது இங்கிலாந்தில் உள்ள பிரிம்மிங்ஹாம் நகரில் பார்வையற்றவர்களுக்கான சர்வதேச விளையாட்டு ஆணையத்தின் சார்பாக உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது . இந்தப் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பார்வையற்றவர்களுக்கான சர்வதேச விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி துவங்கிய 27ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது .
இந்தப் போட்டிகளில் 70 நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையற்ற மற்றும் பார்வை குறைபாடு உடைய விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர் . இதில் ஃபுட்பால் செஸ் பவர் லிப்டிங் ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுகளுடன் இந்த ஆண்டு கிரிக்கெட் போட்டிகளும் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. டி20 வடிவத்தில் நடைபெறும் இந்த போட்டிகளில் இந்தியா பாகிஸ்தான் ஆஸ்திரேலியா இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட் அணிகள் பங்கு பெற்று விளையாட இருக்கின்றன.
உலக பார்வையற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் இந்த வருடம் கிரிக்கெட் போட்டிகள் முதல் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இந்திய பார்வையற்றவர்களுக்கான ஆண்கள் அணியும் மற்றும் பாகிஸ்தான் பார்வையற்றவர்களுக்கான ஆண்கள் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி இந்திய ஆண்கள் பார்வையற்றவர்களுக்கான அணியை வீழ்த்தியது.
இந்நிலையில் இந்திய பார்வையற்றவர்களுக்கான மகளிர் அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா பார்வையற்றவர்களுக்கான மகளிர் அணியை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி வரலாற்று நிகழ்வை பதிவு செய்திருக்கிறது. இந்த வெற்றி பார்வையற்றவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் முதல் வெற்றி மற்றும் வரலாற்று வெற்றியாகும். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய பார்வையற்றவர்களுக்கான மகளிர் அணியினர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் அபார பந்து வீற்றினால் ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 59 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது. இதனைத் தொடர்ந்து அறுபது ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 6.5 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் வர்ஷா மிகச் சிறப்பாக விளையாடி 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற உதவினார் . இதன் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலிய பார்வையற்ற பெண்கள் அணிக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 165 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியும் வீழ்த்தி வரலாற்று சாதனை புரிந்திருக்கிறது இந்திய பார்வையற்றவர்களுக்கான மகளிர் அணி. இதன் மூலம் தனது முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறது.