இந்திய அணி இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா பங்கேற்பாரா என்பது குறித்து நிறைய யூகங்கள் நிலவி வருகிறது.
பிரபல கிரிக்கெட் அனலைசர் பிரசன்னா ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படுவார் எனவும், அப்படி தேர்வு செய்யப்படும் பொழுது இந்திய அணி பலமானதாக மாறிவிடும் என்பதாகவும் கூறியிருந்தார். இதை நோக்கி இந்திய கிரிக்கெட் நிர்வாகம் திட்டமிடுவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.
ஹர்திக் பாண்டியா வெளியிட்ட புகைப்படம்
தற்பொழுது நீண்ட ஓய்வில் இருந்து வரும் ஹர்திக் பாண்டியா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த வாரத்தில் சிவப்பு பந்தில் பந்து வீச்சு பயிற்சி செய்வது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதன் காரணமாக இவர் மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்புகிறார் என்கின்ற பேச்சு பலமானது.
ஆஸ்திரேலிய தொடரில் மூன்று பிரதான வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கும் பொழுது, நான்காவது வேகப் பந்துவீச்சாளராக ஒரு ஆல் கவுண்டர் வெளிநாடுகளில் இந்திய அணிக்கு தேவைப்படுகிறது. அப்படி இருக்கும் பொழுது இந்திய அணிக்கு நீண்ட பேட்டிங் வரிசை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு சுழல் பந்துவீச்சாளராக ஜடேஜா அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற முடியும்.
ஹர்திக் பாண்டியா மீண்டும் டெஸ்ட் அணிக்கு வருகிறாரா?
இந்த நிலையில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கம்பீரிடம் ஹர்திக் பாண்டியா இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பி வருகிறாரா? என்பது குறித்து கேட்கப்பட்டது.
இதுகுறித்து பதில் அளித்த கம்பீர் கூறும் பொழுது “முதலில் சர்வதேச கிரிக்கெட் என்பது வீரர்களை இந்திய அணிக்கு கொண்டு வந்து வளர்ப்பது பற்றி எது கிடையாது. வீரர்களை வளர்க்கவும் கண்டறியவும் உள்நாட்டு கிரிக்கெட் இருக்கிறது. எங்களிடம் தற்போது வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இல்லை என்றால் அது அப்படியே இருக்கட்டும். அதே சமயத்தில் எங்களிடம் ஜடேஜா அஸ்வின் போன்ற ஆல் ரவுண்டர்கள் இருக்கவே செய்கிறார்கள்.மேலும் அக்சர் மற்றும் வாஷிங்டன் இருக்கிறார்கள். மற்றவர்களிடம் இதுபோல ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள் என சொல்ல முடியுமா? என்று பதில் அளித்து இருக்கிறார்.