தற்போது இந்திய அணியில் வீரர்கள் பாதுகாப்பு இன்மையுடன் பயத்திலும் குழப்பத்திலும் இருக்கிறார்கள் என்றும் இதற்கு காரணம் கம்பீர் என்றும் முகமது கைஃப் குற்றம் சாட்டி இருக்கிறார்.
தற்போது இந்திய அணி சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் துரத்தி வெல்ல முடியாமல் பரிதாபமாக தோல்வி அடைந்தது. இந்த டெஸ்ட் போட்டியின் ஆடுகளம் வீரர்கள் தேர்வு என பல விஷயங்கள் விமர்சனம் ஆகி வருகிறது.
வீரர்கள் பயத்தில் இருக்கிறார்கள்
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் இது குறித்து பேசும் பொழுது ” தற்போது இந்திய அணியில் உள்ள வீரர்கள் தங்களது இடம் குறித்த பாதுகாப்பு உணர்வு இல்லாத காரணத்தினால் பயத்திலும் குழப்பத்திலும் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் பொழுது அவர்களால் சுழல் பந்துவீச்சுக்கு எதிரான ஆடுகளத்தில் நம்பிக்கையுடன் விளையாட முடியாது”
“இந்திய டெஸ்ட் அணியில் சர்பராஸ் கான் ஒரு பெரிய சதத்தை அடித்த பிறகு நீக்கப்பட்டார். சாய் சுதர்சன் 87 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக எடுத்ததற்குப் பிறகு விளையாட வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் இருக்கிறார். இதன் காரணமாக இந்திய அணியில் எல்லோருமே தங்களது இடம் குறித்த பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள்”
இருவரும் தமிழ்நாட்டு வீரர்கள்
” வாஷிங்டன் சுந்தர் சுழல் பந்துவீச்சை மிகவும் மென்மையான கைகளுடன் அருமையாக விளையாடுகிறார். அதற்கு மிக முக்கிய காரணம் அவர் சென்னையில் இருந்து வருகிறார். ஏனென்றால் அவர்கள் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் விளையாடி பழக்கப்பட்டவர்கள்”
இதையும் படிங்க : கம்பீர் சொன்ன ஒரு விஷயத்தை கேள்விப்பட்டேன்.. அதனாலதான் தொடர்ந்து தோக்கறாங்க – பிராட் ஹேடின் பேச்சு
“இதேபோல சாய் சுதர்சனும் சென்னையில் இருந்து வரக்கூடியவர். அவரும் சுழல் பந்துவீச்சை மிகவும் சிறப்பாக விளையாடுவார். அவரை மூன்றாவது இடத்தில் விளையாட வைத்து வாஷிங்டன் சுந்தரை எட்டாவது இடத்தில் வைத்திருந்தால் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக வெற்றி பெற்று இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.






