என்ன டீம் எடுத்து வச்சிருக்கீங்க? அந்த 3 பேரை நான் கண்டிப்பா டி20 உலகக்கோப்பை டீம்ல எடுத்துருப்பேன் – முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சாடல்!

0
143

டி20 உலக கோப்பை அணியில் நான் அந்த மூன்று வீரர்களை நிச்சயம் எடுத்திருப்பேன் என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கொள்ள வீரர்கள் குறித்த ஆலோசனை நடைபெற்றது. இதில் கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருடன் சேர்ந்து தேர்வுகுழு உறுப்பினர்களும் ஆலோசனை நடத்தினார்கள். அதில் ஒருமனதாக 15 பேர் கொண்ட அணி முடிவு செய்யப்பட்டது. அன்றைய தினம் மாலை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுவிட்டது. டி20 உலக கோப்பை அணியுடன் சேர்த்து ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியும் வெளியிடப்பட்டுவிட்டது.

- Advertisement -

டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி பட்டியல் வெளியிடப்பட்டதிலிருந்து பலரும் தங்களது கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இவருக்கு பதிலாக அவர் எடுத்திருக்கலாம், இந்த வீரர் இதில் பலவீனமாக இருக்கிறார்; ஆகையால் அந்த வீரர் சரியாக இருப்பார், இந்த வீரரை எடுக்காமல் முட்டாள்தனம் செய்துவிட்டீர்கள் என்ற எண்ணற்ற விமர்சனங்கள் பட்டியல் வெளியிட்ட ஓரிரு தினங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் தனது கருத்துக்களை தெரிவித்து, இந்த மூன்று வீரர்களை அணியில் வைத்திருக்கலாம். நான் தேர்வுகுழு தலைவராக இருந்திருந்தால் நிச்சயமாக எடுத்திருப்பேன் என தெரிவித்து வருகிறார். அவர் கூறுகையில்,

“நான் தேர்வுக்குழு அதிகாரியாக இருந்திருந்தால் இந்திய அணியில் நிச்சயம் சுப்மன் கில், உம்ரான் மாலிக் மற்றும் முகமது சமி ஆகிய மூன்று பேரையும் எடுத்திருப்பேன். இந்த மூன்று பேரும் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். உம்ரான் மாலிக் மற்றும் சுப்மன் கில் இருவரும் இளம் வீரர்களாக இருக்கின்றனர். இந்திய அணியின் எதிர்காலத்திற்கும் இன்னும் சில வருடங்கள் டி20 போட்டிகளில் விளையாடி நல்ல அனுபவம் பெறுவதற்கும் இவர்கள் சரியான வீரராக இருப்பார் என்று கருதுகிறேன்.” என்றார்.

சூரியகுமார் யாதவ் பற்றி பேசிய அவர், “இந்திய அணியில் எடுக்கப்படும் வீரர்கள் எதன் அடிப்படையில் எடுக்கிறார்கள்? எந்த வகையில் அவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டு வருகிறது? என்பதே புரியாத புதிராக இருக்கிறது. ஆலோசனை குழு மீது எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. சூரியகுமார் யாதவ் மிகச் சரியான தேர்வாக இருப்பார். அவர் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் களமிறங்கக்கூடியவர். நல்ல பினிஷர் ஆகவும் இருப்பார்.” என்று கருத்து தெரிவித்தார்.

- Advertisement -

இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட விதம் குறித்து முன்னாள் இந்திய வீரர்கள் மட்டும் அல்லாது பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சனர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.