“ஹர்திக் பாண்டியா எப்படி ஆபத்தான பேட்ஸ்மேனாக மாறினார்?” விளக்குகிறார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர்!

0
423
Hardik

கடந்த டி20 உலகக் கோப்பையின் போது இருந்த இந்திய அணி ஒன்று ; அதற்கு அடுத்து ஆசிய கோப்பைக்கு முன்னால் இருந்த இந்திய அணி ஒன்று; தற்போது இருக்கக்கூடிய இந்திய அணி ஒன்று. இப்படித்தான் இந்திய அணியை மூன்றாக பிரிக்க வேண்டியது இருக்கிறது செயல்பாட்டின் அடிப்படையில்!

கடந்த டி20 உலகக் கோப்பை தோல்விக்கு பின்பு ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் தலைமையின் கீழ், இந்திய அணியின் ஆட்ட அணுகுமுறை முற்றிலும் தாக்குதல் பாணியில் மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் புதிய மற்றும் பழைய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. புதிய அணி கலவைகள் உருவாக்கப்பட்டன. புதிய அணி கலாச்சாரச் சூழல் உருவாக்கப்பட்டது.

- Advertisement -

இப்படி மீண்டு எழுந்து வந்த இந்திய அணி ஆசிய கோப்பை வரையில் வெற்றியோடு பயணித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதற்குப் பிறகு ஆசிய கோப்பையிலும் அதற்கடுத்து நேற்று நடந்த ஆஸ்திரேலியா அணியுடனான டி20 போட்டியின் போதும் இந்திய அணி எதிர்பாராத தோல்விகளைக் கண்டு வருகிறது. வெற்றி பெறுவதற்கான எல்லா திறமைகளும் இருந்தும், ஆட்டத்தில் வெற்றி பெறும் வாய்ப்புகளும் இருந்தும், முதலில் பேட் செய்யும் போது நல்ல ஸ்கோரை கொண்டு வந்தும் கூட இந்திய அணி ஏதோ ஒரு இடத்தில் தவறி தோற்றுக் கொண்டே இருக்கிறது.

அதே சமயத்தில் இந்திய அணியில் பேட்ஸ்மேன்களின் அணுகுமுறையில் நிறைய மாற்றங்கள் உண்டாகி இருக்கின்றன. ரோகித் சர்மா எப்பொழுதும் 10 பந்துகளில் 20 ரன்கள் அடிப்பது என்கின்ற முறையில் மட்டுமே தாக்குதல் எண்ணத்தோடு ஆடுகிறார். அதேபோல பேட்டிங் ஃபார்ம் இல்லாது இருந்து வந்த விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் பேட்டிங் பார்ம்க்கு வந்திருக்கிறார்கள்.

இன்னொரு புறத்தில் சூர்யகுமார் யாதவ் மிகச்சிறப்பான அதிரடியான பேட்டிங் ஃபார்மின் உச்சத்தில் இருக்கிறார். மேலும் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங்தான் மிக ஆபத்தானதாக எதிரணிக்கு இருந்து வருகிறது. காரணம் அவரது பேட்டிங் மிகவும் முதிர்ச்சி அடைந்து இருக்கிறது. அவரது விக்கெட்டை பறிப்பது எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக இருக்கிறது. அவர் அழகாக ஆரம்பித்து அதிரடியாக ஒரு இன்னிங்சை வெற்றிகரமாக முடித்து வைக்கும் திறமையோடு இருக்கிறார். இதுதான் அவரை ஆபத்தான பேட்ஸ்மேன் ஆக மாற்றுகிறது. இங்கிலாந்து அணியுடன் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் மற்றும் நேற்று ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த டி20 போட்டியிலும் அவரது பேட்டிங் மிகவும் முதிர்ச்சியாக இருந்தது.

- Advertisement -

இது குறித்து 2014 முதல் 2019 வரை இந்திய அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வந்த சஞ்சய் பாங்கர் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் ஸ்டைல் எப்படி இருந்தது? தற்போது எப்படி மாறி இருக்கிறது? என்பது குறித்து விளக்கி இருக்கிறார்.

இதுகுறித்து சஞ்சய் பங்கர் விளக்கும்போது “அவர் முன்பு பேட்டிங் செய்யும் பொழுது லெக் சைடை மட்டுமே இலக்காக வைத்து நிற்பார். இப்பொழுது இரண்டு கால்களையும் நேராக வைத்து, இரண்டு ஸ்டம்புகளையும் மறைத்து நிற்கிறார். அதாவது இப்போது ஆப் ஸ்டம்பையும் மறைத்து நிற்கிறார். இதனால் தனது முன் காலை நகர்த்தி மைதானத்தின் எல்லா பக்கத்திலும் ஷாட் விளையாட தன்னை வசதியாக வைத்துக் கொள்கிறார். இதனால்தான் அவர் ஒரு ஆபத்தான பேட்ஸ்மேனாக மாறுகிறார் ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “இப்போது அவர் தன்னிடம் இருக்கும் நிறைய ஷாட்களை காட்டுகிறார். இதுதான் அவரது பேட்டியின் அழகு மற்றும் பலம். இதனால் அவரால் பல பகுதிகளில் ஷாட் விளையாட முடிகிறது” என்று தெளிவாக விளக்கிக் கூறியிருக்கிறார்.