இன்று மதியம் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தென் ஆப்பிரிக்கா செஞ்சுரியன் மைதானத்தில் ஆரம்பிக்க இருக்கிறது. அதே சமயத்தில் ஒருபுறம் மழை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்திய அணி 1992ஆம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதுவரை மொத்தம் அந்த மண்ணில் 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணி நான்கு டெஸ்ட்களை மட்டுமே வென்றிருக்கிறது.
அதே சமயத்தில் ஒருமுறை கூட இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது. கடந்த முறைகளில் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்காவில் விளையாடியது. இந்த முறை இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக அது குறைக்கப்பட்டு இருக்கிறது.
பொதுவாக தென் ஆப்பிரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக வேகத்துடன் மற்றும் பவுன்ஸ் கொண்டதாக இருக்கும். அதே சமயத்தில் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாட்கள் மழையோடு வானம் மேகமூட்டத்தோடு இருக்கும்.
இந்த சூழ்நிலை எல்லாமே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமான ஒன்று. மேலும் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சையே தேர்ந்தெடுக்கும். இது மட்டும் இல்லாமல் அணியில் ஒரு சுழல் பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்பார்கள். எனவே இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். அவருடைய இடத்தில் வேகப்பந்துவீச்சாளர் சர்துல் தாக்கூர் விளையாடுவார்.
இப்படியான நிலையில்தான் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஹர்பஜன்சிங் அஸ்வின் விளையாட வேண்டும் என்று தன்னுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறார். பொதுவாக அஸ்வின் குறித்து ஏதாவது மறைமுகமாக விமர்சனம் செய்வதையே வாடிக்கையாக வைத்திருப்பவர் ஹர்பஜன் சிங். ஆனால் முதல்முறையாக அவருக்கு ஆதரவாக பேசி இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ஏழாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா வருகிறார். எட்டாவது இடம் சர்துல் தாக்கூர் இல்லை அஸ்வினுக்கு இருக்கிறது. இந்த எட்டாவது இடத்தில் நான் அஸ்வின் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். மற்றும் மூன்று இடங்களில் பும்ரா சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் விளையாடலாம்.
ஆனால் தென் ஆப்பிரிக்காவில் நிலைமைகள் சூடாக இருக்கும். ஆடுகளமும் பேட்டிங் செய்ய கடினமாக பவுன்ஸ் கொண்டதாக இருக்கும். உங்களிடம் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். எனவே நீங்கள் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களுடன் செல்ல வேண்டும்.
தென் ஆப்பிரிக்க அணி முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு வரும் என்று நான் நினைக்கிறேன். அது அவர்களுடைய பலம். நாம் நம்முடைய பலத்தில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை கொண்டு செல்ல வேண்டும். இதனால் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட வேண்டும். ஆனால் அப்படி நடப்பதாகத் தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார்!