பிசிசிஐ விராட் கோலி மற்றும் கம்பீர் இருவரையும் வைத்து உரையாடும் நிகழ்ச்சி ஒன்றை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. இதில் கம்பீர் விராட் கோலியை இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்த மாற்றத்திற்காக மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்.
கிரிக்கெட் களத்தில் ஒன்றாக இருவரும் விளையாடி இருந்தாலும் கூட, ஐபிஎல் களத்தில் இரண்டு முறை இருவரும் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பானது. இந்த நிலையில் அதையெல்லாம் உடனே மறந்து இந்திய அணிக்காக இருவரும் ஒன்று சேர்ந்து நல்ல நட்பையும் புரிதலையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்
விராட் கோலி ஐசிசி பட்டங்களை கேப்டனாக வெல்லாவிட்டாலும் கூட, இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சாளர்களை உள்ளே கொண்டு வந்ததும், உடல் தகுதிக்கு மிகவும் கண்டிப்பாக வளர்த்ததும், எல்லா போட்டியையும் வெல்வதற்கு தைரியத்தையும் நல்ல அணுகுமுறையையும் கொண்டு வந்ததும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் முகத்தை மாற்றி அமைத்த கேப்டனாக விராட் கோலி இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கேப்டனாக ஆரம்பித்த முதல் போட்டியிலேயே 400 ரன்களுக்கும் மேற்பட்ட இலக்கை நோக்கி விராட் கோலி அணியை விளையாட வைத்த விதம் இன்று வரையில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்த பெருமை உங்களுக்குதான் விராட் கோலி
இதுகுறித்து பேசிய கம்பீர் கூறும் பொழுது “டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக நீங்கள் செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் மிகவும் வலிமையான பவுலிங் யூனிட்டை உருவாக்கினீர்கள். டெஸ்ட்போட்டியில் 20 விக்கெட் கைப்பற்றி வென்றீர்கள். இந்தபெருமை உங்களையே சேரும். இதனால்தான் நீங்கள் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக இருக்கிறீர்கள். நீங்கள் அப்படியான அணுகுமுறையையும் மனநிலையையும் கொண்டு வருகிறீர்கள்”
“ஆஸ்திரேலியாவில் நீங்கள் முதல் முறை கேப்டன் ஆன பொழுது 400 ரன்களுக்கும் மேலான இலக்கை தைரியமாக துரத்தி நீங்கள் அதில் சதம் அடித்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. வெளிநாடுகளில் இப்படியான போராட்ட குணத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற காரணமாக இருந்தீர்கள். இந்த அணுகுமுறை மற்றும் மனநிலையை நீங்கள்தான் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் கொண்டு வந்தீர்கள்”
இதையும் படிங்க:
“நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்க்க மகத்தான பங்களிப்பு செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் எவ்வளவு முக்கியம் என்று நீங்கள் பேசியது, அடுத்த தலைமுறைக்கு டெஸ்ட் கிரிக்கெட்டை பார்ப்பதற்கும் விளையாடுவதற்கும் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.