2021ஆம் ஆண்டு யுஏஇ-யில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் போது அப்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் பேசவே வருண் சக்கரவர்த்தி பயந்தார் என்று முன்னாள் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்திருக்கிறார்.
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மொத்தம் ஒன்பது விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய அணிக்காக இந்த தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக வருண் சக்கரவர்த்தி வந்தார். அவர் பந்துவீச்சில் கொடுத்த தாக்கம் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்ற மிகவும் முக்கிய காரணமாக அமைந்தது.
வருண் சக்கரவர்த்தியின் அறிமுக சோகம்
வருண் சக்கரவர்த்தி முதல் முறையாக தற்காலிக கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு 2021 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். பிறகு அதே ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். அதில் மூன்று போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை.
இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் இந்திய அணிக்கு விளையாட வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார். அங்கிருந்து அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை ஏறு முகத்தில் மாற ஆரம்பித்தது. இறுதியாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை உயர்த்த மிக முக்கியமான காரணமாக இருந்து அசத்தியிருக்கிறார்.
விராட் கோலிகிட்ட பேச பயந்தார்
இந்த நிலையில் வருண் சக்கரவர்த்தியின் ஆரம்பம் பற்றி பேசி இருக்கும் பரத் அருண் கூறும் பொழுது “வருண் சக்கரவர்த்தி ஆரம்பத்தில் கொஞ்சம் பயந்தவராகவே காணப்பட்டார். அவர் தனக்கு என்ன மாதிரியான பீல்ட் வேண்டும் என்று கேப்டன் விராட் கோலி இடம் கேட்க மிகவும் பயந்தார். ஆனால் தற்போது அவரை பாருங்கள் அவர் மிகவும் வித்தியாசமான கிரிக்கெட் ஆக மாறிவிட்டார்”
இதையும் படிங்க : கேப்டனா தோனிக்கு அடுத்து.. ரோகித் இருக்க முக்கிய காரணம் இதுதான்.. வேற ரகம் – சேவாக் பாராட்டு
“கிரிக்கெட்டின் எலைட் லெவல் 90 சதவீதம் மனநிலை சம்பந்தப்பட்டது. இதில் தற்போது வருண் தன்னை நிரூபித்து விட்டார். இப்போது அவரால் பந்தில் என்ன தர முடியும் என்று உணர்ந்து விட்டார். அவர் இப்பொழுது சொந்தமாக தனக்கு பீல்டு செட் அப் வைத்துக் கொள்கிறார். ஏனென்றால் அவர் தன்னை இப்போது மிகவும் நம்புகிறார்” என்று கூறியிருக்கிறார்.






