இன்று பெங்களூர் மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதி கொண்ட போட்டியில் இலங்கை அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 156 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் ஆறு வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற ஒருவர் கூட அரை சதம் அடிக்கவில்லை.
இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு இரண்டு விக்கெட் மட்டும் போக மற்ற இரண்டு வீரர்கள் களத்தில் நின்று அரை சதங்கள் அடித்து, 25.4 ஓவர்களில் ஆட்டத்தை முடித்து அபார வெற்றி பெற்றார்கள்.
இங்கிலாந்து அணி தான் விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளை தோற்று தற்பொழுது அரையிறுதி வாய்ப்பை 90% க்கு மேல் இழக்கும் நிலையில் இருக்கிறது. பல அணிகளின் செயல்பாட்டை பொறுத்துதான் இங்கிலாந்து அணியின் அரைஇறுதி வாய்ப்பு இருக்கிறது. மேலும் அதற்கு இங்கிலாந்து அடுத்து வரும் நான்கு ஆட்டங்களையும் வெல்ல வேண்டும்.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்ட, நடப்பு உலகக்கோப்பையின் முதல் போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. உலகின் மிகப்பெரிய மைதானமான அந்த மைதானத்தில் ரசிகர்களின் கூட்டம் குறைவாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இப்படியான குற்றச்சாட்டை அழுத்தமாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வைத்திருந்தார். ஆனால் உண்மையில் அந்த மைதானத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் வந்திருந்தார்கள். மைதானம் ஒரு லட்சத்திற்கும் மேலான ரசிகர்களுக்கான கொள்ளளவு கொண்டது என்பதால் குறைவாக தெரிந்தது என்பதுதான் உண்மை.
தற்பொழுது இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்து கொண்டு இருக்க, மற்ற அணிகளை வம்பு இழுப்பதை வேலையாக வைத்திருக்கும், குறிப்பாக இந்திய அணியை சீண்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் மைக்கேல் வாகனுக்கு, இந்திய முன்னால் வீரர் இர்பான் பதான் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.
இது குறித்து ட்விட் செய்திருக்கும் இர்பான் பதான் “சிலர் மைதானங்களில் காலி இருக்கைகள் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள். அந்த நேரத்தில் அவர்கள் தங்களின் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவது புத்திசாலித்தனமாக இருக்கும்!” என்று குறிப்பிட்டிருக்கிறார்!
Some people were more concerned about empty seats in the stadiums, when it would have been wiser to focus on their cricket.
— Irfan Pathan (@IrfanPathan) October 26, 2023