இந்திய அணி தற்பொழுது ஆசியக்கோப்பை தொடரில் விளையாடுகிறது. இதற்கு அடுத்து இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர், இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக இருக்கிறது!
இந்த இரண்டு தொடர்களுக்கும் நடுவில் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரையில், உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது.
தற்பொழுது இந்தத் தொடருக்கான அணியை அறிவிப்பதில் இந்திய தேர்வுக் குழுவுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. நாளை பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது. இதற்கு அடுத்து ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. இந்த மூன்று நாட்களுக்குள் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள உலகக்கோப்பை இந்திய அணியில், ஆசியக் கோப்பையில் பிளேயிங் லெவனில் இடம்பெற்று வரும் எல்லோரும் தங்களது இடத்தை உறுதி செய்து இருக்கிறார்கள். இது இந்திய அணி நிர்வாகத்திற்கு மகிழ்ச்சியான விஷயமாக இருக்கிறது.
காயத்தில் இருந்து திரும்பி வந்த ஜஸ்ப்ரித் உம்ரா மற்றும் கே எல் ராகுல் இருவரும் வெளிக்காட்டும் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. மேலும் மிடில் வரிசையில் தரப்பட்ட வாய்ப்பை இடதுகை பேட்ஸ்மேன் இசான் கிஷான் அற்புதமாகப் பயன்படுத்தியிருக்கிறார். இதனால் மிடில் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன் தேவையும் தீர்ந்திருக்கிறது. மேலும் அணியின் டாப் ஆர்டர்கள் எல்லோரும் பார்முக்கு திரும்பி இருக்கிறார்கள்.
ஆனால் இந்திய அணி நிர்வாகத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதுகுப் பகுதியில் மீண்டும் ஏற்பட்டுள்ள காயம் கவலையைக் கொடுப்பதாக இருக்கிறது. ஒரு அனுபவம் வாய்ந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பேக்கப் வீரராக இருப்பது நல்லது. நாளை அந்த இடத்தில் யாராவது காயம் அடைந்தால், உடனே களம் இறக்க ஆள் தேவை. இந்த காரணத்திற்காக ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வுக்குழு விரும்புகிறது.
அதேசமயத்தில் அவருக்கு காயம் தொடரும் என்றால், அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை தவறவிடுவார். அதற்கடுத்து உலகக்கோப்பைக்கு முன்னதாக இரண்டு பயிற்சி போட்டிகள் மட்டுமே இருக்கும். இது போதுமானதாக அமையாது.
தற்பொழுது ஸ்ரேயாஸ் ஐயரை தொடர்வதா? விடுவதா? என்று தேர்வுக்குழு குழப்பத்தில் இருக்கிறது. ஒருவேளை இவரை விலக்கினால், ஓரளவுக்கு அனுபவம் கொண்ட சஞ்சு சாம்சன், இல்லையென்றால் இளம் வீரர் திலக் வர்மா ஆகியோர் இந்த இடங்களுக்காகக் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வுக்குழு இவர்களை யோசிப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது!