பணத்தால வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் மாறிடுமா.. காலை 5:30 மணிக்கு காத்திருந்த ஆட்கள் எங்க? – பிரையன் லாரா வருத்தம்

0
885
Lara

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து முதல் டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் 121 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டு இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் எதிர்காலம் பற்றி லெஜன்ட் பிரையன் லாரா மிகவும் வருத்தமாகப் பேசியிருக்கிறார்.

1970 ஆரம்பித்து 90கள் வரையில் உலகக் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மிகவும் பலமான ஒரு அணியாக இருந்தது. ஒரு நாள் கிரிக்கெட்டுக்கான முதல் இரண்டு உலகக் கோப்பைகளை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 வடிவத்திலும் இரண்டு உலகக் கோப்பைகளை கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் கிரிக்கெட்டின் அசல் வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த அணி முன்னேறுவதற்கான எந்த வாய்ப்புகளும் தெரியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டை வளர்ப்பதற்காக உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பை சிறந்த முறையில் கிரிக்கெட் வாரியம் உருவாக்கவில்லை. இது அந்த நாட்டு கிரிக்கெட்டை வெகுவாகப் பாதித்திருக்கிறது.

இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் லெஜன்ட் பிரையன் லாரா கூறும்பொழுது “வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் வங்கி கணக்கில் 100 மில்லியன் இல்லை 200 மில்லியன் பணத்தை முதலீடு செய்தால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வளர்ந்து விடுமா? என்றால் எனக்குத் தெரியவில்லை. எங்கள் வீரர்கள் திறமையை பயன்படுத்தி விளையாடவில்லை.

- Advertisement -

எங்களுடைய கிரிக்கெட் வாரியம் சரியான ஸ்பான்ஸர்களை ஈர்ப்பதில் தோல்வியடைந்து இருக்கிறது. அடித்தட்டில் இருந்து கிரிக்கெட்டை வளர்ப்பது, அகாடமி மற்றும் உள்நாட்டு கட்டமைப்பை மேம்படுத்துவது போன்றவை மிகவும் முக்கியமானது. இந்த விஷயத்தில் பின்தங்கி இருக்கிறோம்.

இதையும் படிங்க : ஸ்டோக்ஸ் எங்க இங்கிலாந்து டீமை சர்க்கஸில் சேர்க்கலாம்.. ஐபிஎல்-லால் நடந்தது இதுதான் – பாய்காட் விமர்சனம்

நான் புதன்கிழமை காலை 7:30 மணிக்கு லார்ட்ஸ் மைதானத்தின் கேட் பக்கம் நடந்து கொண்டிருந்தேன். அப்போதே டெஸ்ட் கிரிக்கெட்டை பார்ப்பதற்காக மக்கள் வந்து காத்திருந்தார்கள். இதே போல நான் சிறுவனாக இருக்கும் பொழுது வெஸ்ட் இண்டீஸ் குயின்ஸ் பார்க்கில் காலை 5:30 மணிக்கே ரசிகர்கள் காத்திருப்பார்கள். ஆனால் இப்பொழுது 11:00 மணி ஆனால் கூட யாரும் வருவதில்லை மைதானம் காலியாக இருக்கிறது” என்று வருத்தப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -