தற்போது டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தங்களது சொந்த நாட்டில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடுகிறது. இன்று இந்த தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று இருக்கிறது.
இன்று முதல் டி20 போட்டிக்கான டாஸில் வென்ற பங்களாதேஷ் பந்துவீச்சை தேர்வு செய்தது. உள்நாட்டில் மிகவும் வலிமையான பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஜிம்பாப்வே அணி துவக்கத்தில் பெரிய அளவில் நெருக்கடியில் சிக்கியது. அந்த அணியின் பேட்ஸ்மேன்களுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை.
இதன் காரணமாக ஜிம்பாப்வே 41 ரண்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்தது. இந்த நிலையில் 8வது விக்கெட்டுக்கு மடண்டே மற்றும் மசகட்சா ஜோடி சேர்ந்து பொறுமையாக அணியை மீட்க ஆரம்பித்தார்கள். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 65 பந்தில் 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. மடண்டே 39 பந்தில் 43 ரன்கள், மசகட்சா 38 பந்தில் 34 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 124 ரன்கள் எடுத்தது. பங்களாதேஷ் தரப்பில் டஸ்கின் அகமத் மற்றும் சைபுதீன் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
இதற்கு அடுத்து பங்களாதேஷ் அணி மிகவும் பொறுமையாக ஆரம்பித்தது. பவர் பிளேவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்தது. 10 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக இந்த போட்டி கடைசி ஓவர் வரை செல்லும்என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் பங்களாதேஷ் அணி மேற்கொண்டு விக்கெட்டுகளை ஏதும் இழக்காமல் 15.2 ஓவரில் இலக்கை எட்டி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பங்களாதேஷ் அணியின் துவக்க ஆட்டக்காரர் தன்ஷித் ஹசன் ஆட்டம் இழக்காமல் 47 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். இவருடன் இணைந்து விளையாடிய தவ்ஹீத் ஹ்ரிடாய் அதிரடியாக 18 பந்தில் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உடன் ஆட்டம் இழக்காமல் 33 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க : கோப்பையை இப்பவே கொடுத்துடுங்க.. வெஸ்ட் இண்டீஸ் டி20 உலக கோப்பை அணி.. 2 சர்ப்ரைஸ் மாற்றங்கள்
தற்பொழுது துவங்கியுள்ள இந்த ஐந்து டி20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்பதற்காகத்தான் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடும் முஸ்தஃபீஸூர் ரஹ்மான் நாடு திரும்பி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் மிகவும் பிடிவாதமாக இருந்து உலகக் கோப்பைக்கான பயிற்சிகளை ஆரம்பித்திருக்கிறது!