தென் ஆப்பிரிக்கா அணி மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆடுவதற்காக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்துள்ளது . இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று ‘பிரிஸ்பேனில்’ தொடங்கியது . முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி 152 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது . அதனைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 145 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய ஆஸ்திரேலியா அணி மேற்கொண்டு 73 ரன்களை சேர்த்த நிலையில் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . அந்த அணியில் அதிகபட்சமாக டிராவீஸ் ஹெட் 92 ரன்களை எடுத்திருந்தார்.
தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சில் ரபாடா நான்கு விக்கெட்டுகளையும் ஜான்சன் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் .
தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது .’பவுமா மற்றும் சோன்டோ’ இந்த இரு வீரர்களை தவிர மற்ற எல்லா வீரர்களும் ஒற்றை இலக்க ரண்களில் ஆட்டம் இழந்தனர் . ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கமின்ஸ் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் .
36 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து தான் வெற்றி பெற முடிந்தது . ஆஸ்திரேலியா அணியின் ‘டிராவீஸ் ஹெட் ‘ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் .
இந்த டெஸ்ட் போட்டியில் முதல் நாளான நேற்று 15 விக்கெட்கள் விழுந்தன . இரண்டாம் நாளான இன்று 19 விக்கெட் விழுந்து ஆட்டமானது இரண்டே நாளில் முடிந்து விட்டது . இந்த ஆட்டமானது இரண்டே நாளில் முடிந்ததால் கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது . இதேபோன்று ஒரு ஆட்டம் இந்தியாவிலோ அல்லது ஆசிய நாடுகளில் முடிந்திருக்குமானால் இந்நேரம் அது ஒரு பேசு பொருளாகி இருக்கும் .
இதையே மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ள இந்தியா அணியின் முன்னாள் அதிரடி வீரர் ‘விரேந்தர் சேவாக்’, “மொத்தமாக 142 ஓவர்களில் ஒரு டெஸ்ட் போட்டியானது முடிந்து விட்டது . இரண்டு அணிகளும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பேட்டிங் செய்து விட்டன . இரண்டு நாட்களில் ஆட்டத்தை முடிக்கும் ஆடுகளங்களை வைத்துக்கொண்டு அவர்கள் உலகிற்கு பாடம் எடுக்கிறார்கள் . என்ன மாதிரியான ஆடுகளங்கள் இவை. இதேபோன்று ஒரு டெஸ்ட் போட்டியானது இந்தியாவில் நடந்து முடிந்திருக்குமானால் நாம் ஏதோ டெஸ்ட் கிரிக்கெட்டையே அழிக்க வந்திருப்பது போல் பாடம் எடுக்க துவங்கி விடுவார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
பொதுவாகவே ‘பிரிஸ்பேன்’ ஆடுகளத்தில் வேகம் மற்றும் ‘பவுன்ஸ்’ இருந்தாலும் இந்த முறை ஆஸ்திரேலியா அணி நிறைய புற்களையும் வளரவிட்டுள்ளது . இதனால் பந்து அதிகப்படியாக எகிறி வருவதோடு பந்துவீச்சாளர்களுக்கு ‘விக்கெட்’ இருந்து ‘ஸ்விங்’கும் கிடைத்தது இதனால் பேட்ஸ்மேன்கள் ஆட மிகவும் சிரமப்பட்டனர் .