ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் இந்திய அணியின் ரசிகர்களை நாங்கள் அமைதியாக்கி வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி செய்திருக்கிறது.
மேலும் இதற்குக் காரணமாக அவர் கூறியிருக்கும் பொழுது, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள்பார்க்க வருவார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் ஒருதலைப்பட்சமாக இந்திய அணியை மட்டுமே ஆதரிப்பார்கள்.
எனவே அவர்களிடமிருந்து எங்களுக்கு எந்த விதமான ஆதரவும் கிடைக்காது. அதனால் நாங்கள் இந்திய ரசிகர்களை அமைதியாக்கும் விதமாக சிறப்பாக செயல்படுவோம், அதைவிட எங்களுக்கு திருப்தி தரும் விஷயம் வேறு எதுவும் கிடையாது என்பதாக பேசியிருந்தார்.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் கூறியது போலவே எல்லாம் நடந்தது. மேலும் இந்த வேலையை அவரே முன்னின்று செய்தார் என்பது இதில் இந்திய ரசிகர்களுக்கு பெரிய சோகமாகவும் மாறியது.
தற்பொழுது சமூக வலைதளங்களில் கம்மின்ஸ் குறித்து கூறும் பொழுது, அவர் என்ன சவால் விட்டாரோ அதை அப்படியே திருப்பி சாதித்திருக்கிறார் என்பதாக பலரும் அவர் குறித்து பாராட்டி பெருமையாக கருத தெரிவித்து வருகிறார்கள்.
அதே சமயத்தில் இந்திய அணியின் தோல்வி குறித்தும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தில் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வது சரி இல்லை என்றும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி பரபரப்பான கருத்து ஒன்றை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “தொடர்ச்சியாக போட்டிகளில் வெற்றி பெறும் பொழுது தன்னம்பிக்கை அதிகமாக மாறும். இதனால் இப்படியான அதீத தன்னம்பிக்கை உங்களுக்கு தீங்காகவும் முடியும். இந்திய அணிக்கு இப்படித்தான் நடந்திருக்கிறது.
இந்தியாவில் ரசிகர்கள் வேறு எந்த அணி வீரர்களையும் பாராட்ட மாட்டார்கள். எங்களுக்கும் இது நடந்திருக்கிறது. நாங்கள் பௌண்டரி, சதம் அடித்தபோது, விக்கெட் எடுத்தபோது எந்த பாராட்டும் கூட்டத்திடம் இருந்து வராது. இறுதிப் போட்டியில் ஹெட் சதம் அடித்த பொழுதும் இதே தான் நடந்தது. ஏன் இப்படி நடக்கிறது?
இந்தியாவில் கிரிக்கெட்டை நிறைய பேர் விரும்புகிறார்கள் என்பதும், இந்திய ரசிகர்கள் படித்த கூட்டம் என்றாலும், ஏன் அவர்களிடமிருந்து எதிரணிக்கான எந்த பாராட்டும் கிடைப்பதில்லை? குறைந்தபட்ச நபர்களாவது இறுதிப் போட்டியில் எழுந்து நின்று ஆஸ்திரேலியாவுக்காக பாராட்டி இருக்கலாம் இல்லையா? இந்திய அணியின் உடல் மொழி தன்னம்பிக்கையற்று போகும் பொழுது அதை கூட்டமும் எதிரொலிக்கிறது!” என்று பேசி இருக்கிறார்!