ஐபிஎல் 16 வது சீசன் வரும் 31ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் குஜராத்தை 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.
கடந்த சீசனில் விளையாடிய 14 போட்டிகளில் 10 போட்டியில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஒன்பதாவது இடத்தையே புள்ளி பட்டியலில் சி எஸ் கே பிடித்தது.
இந்நிலையில் சென்னை அணியின் அனுபவ வீரரான அம்பத்தி ராயுடு பேசிய வீடியோ ஒன்றை சி எஸ் கே அணி வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு தொடர் தான் உண்மையான ஐபிஎல் போல் இருக்கிறதாக குறிப்பிட்டார். அதற்கு காரணம், ஐபிஎல் தொடரில் எப்போதும் ஒரு ஊரிலிருந்து வேறு ஒரு ஊருக்கு பயணம் செய்து கொண்டே இருப்போம் என்றும் இம்முறை கொரோனா தொடர்பான எந்த கட்டுப்பாடும் இல்லாதது மனதுக்கு மகிழ்ச்சியை தருவதாகவும் அம்பத்தி ராயுடு கூறினார்.
ஒரு மோசமான சீசனில் விளையாடி விட்டு தற்போது மீண்டும் வந்திருப்பதை சுட்டிக்காட்டிய ராயுடு அதுவே நாங்கள் சிறப்பாக விளையாட எங்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும் என்று கூறினார். இம்முறை நாங்கள் சிறப்பான முறையில் தயாராகி இருப்பதாக சுட்டிக்காட்டிய ராயுடு, கடந்த முறை செய்த தவறை இம்முறை நாங்கள் நிச்சயமாக சரி செய்வோம் என்றும் கூறினார். இந்த சீசன் சிறப்பாக அமையும் என்றும் அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.
கடந்த சீசனில் அம்பத்தி ராயுடு 13 போட்டிகளில் விளையாடி 274 ரன்கள் மட்டுமே அடித்தார். இதில் ஒரு 50 ரன் ஸ்கோர் மட்டும் அடங்கும். சராசரியாக 24 ரன்கள் மட்டுமே ராயுடு சேர்த்தார். இதனால் இம்முறை சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடியில் ராயுடு உள்ளார்.
இந்தத் தொடரில் அம்பத்தி ராயுடுவின் பேட்டிங் வரிசை குறித்து கேள்வி எழுந்துள்ளது ராயுடு தொடக்க வீரராக களம் இறங்கிய போது சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள் ஆனால் நடு வரிசையில் அவருக்கு போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை. கடந்த சீசனின் போது ராயுடு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் பிறகு அந்த முடிவில் இருந்து பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.