2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகளுக்கிடையே லக்னோவில் அமைந்துள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸில் வெற்றி பெற்ற டெல்லி அணியின் கேப்டன் வார்னர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
லக்ன அணியின் தொடக்க ஆட்டக்காரர் கெயில் மேயர்சின் அதிரடியான ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்களில் 193 ரண்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்தது . சிறப்பாக ஆடிய மேயர்ஸ் ஏழு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகளுடன் 36 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்தப் போட்டியில் லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் சிறப்பாக பந்துவீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் ஆவேஸ் கான் இரண்டு விக்கெட்டுகளையும் ரவி பிஸ்னாய் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்தத் தொடரில் லக்னோ அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
போட்டிக்கு பின் பேட்டியளித்த லக்னோ அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் ” இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது . ஆடுகளத்தை பற்றிய எந்த ஒரு அனுமானமும் எங்களிடம் இருக்கவில்லை. இந்த வெற்றியின் மூலம் கிடைத்த நம்பிக்கையை எடுத்துக் கொண்டு இனி ஒரு மாற்றங்களில் சிறப்பாக செயல்படுவோம். மேயர்ஸ் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. சுழற் பந்துவீச்சிக்கு எதிராக தாக்குதல் ஆட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று இறங்கினோம் அதை செயல்படுத்தி ஒரு வலுவான இலக்கை நிர்ணயித்தோம்.” என்று தெரிவித்தார் .
மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய ராகுல் “டெல்லி அணியின் துவக்கமும் சிறப்பாக இருந்தது. மார்க் வுட் தனது புயல் வேக பந்துவீச்சின் மூலம் ஆட்டத்தை முழுவதுமாக எங்கள் பக்கம் திருப்பி விட்டார் . இதுபோன்ற பந்துவீச்சு ஒவ்வொரு வேகப்பந்து வீச்சாளருக்கும் கனவு போன்றது. இன்றைய நாள் மார்க் வுட்டின் நாளாக அமைந்தது. மற்ற பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினர். டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை ஒவ்வொரு நாளும் புதிய சவாலுக்கு தயாராக இருக்க வேண்டும்.. இந்த வெற்றி மகிழ்ச்சி ஆனால் இந்த வெற்றியை பற்றி நாங்கள் அதிகம் யோசிக்கவில்லை எனக் கூறி முடித்தார் ராகுல்.