இன்று உலகக்கோப்பை தொடரில் இமாச்சல் பிரதேசம் தரம்சாலா மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி வருகின்றன.
இங்கிலாந்து அணி முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது. பங்களாதேஷ் அணி முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்று இருந்தது.
இந்த நிலையில் இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை. மொயின் அலியின் இடத்தில் ரீஸ் டாப்லி இடம் பெற்றார். பங்களாதேஷ் தரப்பில் முகமதுல்லா இடத்தில் மெகதி ஹசன் இடம் பெற்றார்.
கடந்த முறை போல் இல்லாமல் இந்தமுறை இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர்கள் முதல் விக்கெட்டுக்கு 115 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ஜானி பேர்ஸ்டோ 59 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதற்கு அடுத்து டேவிட் மலான் மற்றும் ஜோ ரூட் இருவரும் ஜோடி சேர்ந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்த டேவிட் மலான் 107 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர் உடன் 140 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
37.3 ஓவரில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 266 ரன்கள் சேர்த்து இருந்த இங்கிலாந்து அணி, அதற்கு அடுத்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் மட்டும் எடுத்து, 364 ரன்களுடன் முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது.
ஒருகட்டத்தில் இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக, தென் ஆப்பிரிக்கா இலங்கைக்கு எதிராக இந்த உலகக் கோப்பையில் எடுத்த 428 ரன்களை எளிதாக கடக்கும் நிலையில் இருந்தது. ஆனால் கடைசிப் பகுதியில் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு தடுத்து விட்டார்கள்.
இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 82 (68), ஜோஸ் பட்லர் 20 (10), ஹாரி புரூக் 20 (15), லியாம் லிவிங்ஸ்டன் 0 (1), சாம் கரன் 11 (15), கிரீஸ் வோக்ஸ் 14 (11), ஆதில் ரஷீத் 11 (7), மார்க் வுட் 6* (5), ரீஸ் டாப்லி 1* (2) ரன்கள் எடுக்க 50 ஓவர்களில் 364 ரன்கள் சேர்த்தது.
பங்களாதேஷ் அணித்தரப்பில் இறுதி கட்டத்தில் மிகச் சிறப்பாக பந்து வீசிய சோரிஃபுல் இஸ்லாம் 3, மெஹதி ஹசன் 4, டஸ்கின் அஹமத் 1மற்றும் ஷாகிப் அல் ஹசன் 1 விக்கெட் கைப்பற்றினார்கள்!