ஏன் இன்னும் பும்ராவுக்கு மாற்று வீரர் அறிவிக்காம இருக்கு – ரோகித் பேட்டி!

0
184

மாற்று வீரரை ஏன் இன்னும் அறிவிக்காமல் இருக்கிறோம் என்று பேட்டி அளித்துள்ளார் ரோகித் சர்மா.

தென் ஆப்பிரிக்கா உடனான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்க வீரர்களாக டி காக் மற்றும் டெம்பா பவுமா இருவரும் களமிறங்கினார்கள்.

- Advertisement -

இரண்டாவது டி20 போட்டியில் டக் அவுட் ஆன ரிலே ரோசவ் அபாரமாக விளையாடி 48 பந்துகளில் சதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 8 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் அடங்கும். டி காக் 43 பந்துகளில் 68 ரன்கள் அளித்திருந்த இதில் நான்கு சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் அடங்கும். கடைசியில் வந்து மூன்று சிக்ஸர்கள் அடித்து ஐந்து பந்துகளுக்கு 19 ரன்கள் அடித்திருந்தார் மில்லர். 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்திருந்தது தென்னாப்பிரிக்கா அணி. 

இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் துவக்க வீரர்களாக களமிறங்கினர். 14 பந்துகளில் 27 ரன்கள் அடித்து ரிஷப் பன்ட் அவுட் ஆனார். தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 46 ரன்கள் அடித்திருந்த போது, துரதிஷ்டவசமாக ஆட்டம் இழந்தார். அதன் பிறகு வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி 120 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகள் இழந்திருந்தது. பின்னர் தீபக் சகர் 17 பந்துகளில் 31 ரன்கள் அடித்து நம்பிக்கை கொடுத்தார். அதுவும் நீடிக்கவில்லை. 178 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. 49 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவில் போட்டி வென்றது. 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

போட்டிக்கு பிறகு பேட்டியளித்த ரோகித் சர்மா, பும்ராவிற்கு மாற்று வீரர் யார்? எப்போது அறிவிக்கப்படும் என்பது பற்றி தெரிவித்தார்.

- Advertisement -

“தற்போது டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் ஏழு முதல் எட்டு வீரர்கள் மட்டுமே ஏற்கனவே ஆஸ்திரேலியா மைதானங்களில் விளையாடிய அனுபவம் பெற்றவர்கள். மீதமிருக்கும் வீரர்களுக்கு ஆஸ்திரேலியா மைதானத்தில் போதிய அனுபவம் இல்லை. முதலில் அனுபவமிக்க பந்துவீச்சாளரை கவனிக்க வேண்டும். அதில் யார் சரியாக இருப்பார்? என்பதை தேர்வு செய்த பிறகு, பும்ராவிற்கான மாற்று வீரர் அறிவிக்கப்படும். இப்போது வரை எனக்கும் பயிற்சியாளருக்கும் யார் பும்ரா இடத்திற்கு வருவார்? என்பது பற்றி தெரியாது. உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது. விரைவில் அது பற்றி அறிவிப்புகள் வரும்.” என்றார்.