“நாங்க உண்மையா செய்ய நினைச்சது வேற.. அதைத்தான் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சொன்னோம்!” – பாபர் அசாம் பரபரப்பான பேச்சு!

0
486
Babar

உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணிக்கு மறக்க முடியாத ஒரு போட்டியாக இன்று நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய போட்டி அமைந்திருக்கிறது.

இன்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 401 ரன்கள் குவித்து அசத்தியது. ரச்சின் ரவீந்தரா இந்த தொடரில் மூன்றாவது முறையாக சதம் அடித்தார். இந்தப் போட்டிக்கு திரும்ப வந்த கேன் வில்லியம்சன் 95 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு மழை ஒருபுறம் போட்டியில் கலந்து கொண்டு விளையாடியது. இந்த சூழ்நிலையில் டக்வோர்த் லீவிஸ் விதியை மனதில் வைத்து, இலக்குக்கு அதிரடியாகவும் விளையாட வேண்டும், அதே சமயத்தில் விக்கெட்டையும் தரக்கூடாது என்கின்ற நிலையில் பாகிஸ்தான் விளையாடியது.

இந்த ரன் துரத்தலில் பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் பகார் ஜமான் அவருடைய வழக்கமான இயல்பான பேட்டிங் பாணியில் பின்னி எடுத்தார். மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 63 பந்துகளில் சதம் அடித்தார்.

இறுதியாக பாகிஸ்தான் 25.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்திருந்தபோது மழை மீண்டும் வந்து நிற்காமல் பெய்தது. இந்த நேரத்தில் பாகிஸ்தான் அணி 21 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க, பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி அரை இறுதி வாய்ப்பில் நீடிக்கிறது.

- Advertisement -

வெற்றிக்கு பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் “நாங்கள் இலக்கை துரத்த ஆரம்பித்த பொழுது அடைய முடியும் என்று நம்பினோம். டிரெஸ்ஸிங் ரூமுக்கு எங்களுக்கு ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் தேவை என்கின்ற செய்தியை அனுப்பினோம். மழை வரும் என்று நினைத்தோம். ஆனால் இந்த அளவிற்கு இருக்கும் என்று நினைக்கவில்லை.

உண்மையை சொல்வது என்றால் நாங்கள் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கத்தான் நினைத்தோம். நான் பகார் ஜமானுக்கு ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து கொடுக்க விரும்பினேன். பவுண்டரி எல்லைகள் சிறியதாக இருந்ததால் அதைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தோம். இன்று சிறப்பாக வெற்றியை அடைந்தோம்.

ஆனால் நாங்கள் கடந்த சில போட்டிகளாகச் சரியாக விளையாடவில்லை. அரை இறுதி வாய்ப்பு குறித்து, அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் பார்க்கலாம். பாசிட்டிவாக விளையாட முயற்சி செய்கிறோம். ஒவ்வொரு போட்டியாக செல்வோம்!” என்று கூறி இருக்கிறார்!