பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நேற்று நடந்த முடிந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய பஞ்சாப் அணி 10 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய பானு ராஜபக்சா 9 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் குவித்து 33 ரன்கள் குவித்தார். பின்னர் இறுதியில் விளையாடிய காகிசோ ரபாடா 16 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடித்து 25 ரன்கள் குவித்தார். கொல்கத்தா அணியில் மிக சிறப்பாக பந்து வீசிய உமேஷ் யாதவ் 4 ஓவரில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 15 பந்துகளில் 26 ரன்கள் குவித்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்றார்.
பின்னர் ஆண்ட்ரூ ரசல் மற்றும் சாம் பில்லிங்ஸ் ஜோடி இருவரும் இணைந்து ஆட்டத்தை 15வது ஓவரிலேயே முடித்துவிட்டனர். இவர்கள் இருவரில் குறிப்பாக ரசல் 31 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 8 சிக்சர் அடித்து 70* ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆண்ட்ரூ ரசலை வெகுவாக பாராட்டி பேசிய ஷாருக்கான்
மீண்டும் வருக என் நண்பனே.நீங்கள் அடிக்கும் பந்துகள் வானில் பறப்பதை பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. அதை இன்று நான் பார்த்தில் எனக்கு திருப்தி. நீங்கள் பந்துகளை இவ்வாறு அடிக்கும் வேளையில் அது தனக்கென ஒரு உயிர் எடுக்கும்” என்று கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் தன்னுடைய டுவிட்டர் வலைத்தளத்தில் பாராட்டியுள்ளார்.
மேலும் அவருடைய பதிவில் “உமேஷ் யாதவ் உங்களுடைய பந்து வீச்சு மிக அற்புதமாக இருந்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அவரது அணி வீரர்கள் அனைவரும் போட்டியை மிக சிறப்பாக விளையாடி முடித்திருக்கிறார்கள். உங்கள் அனைவருக்கும் இனிய இரவு” என்று ஷாருக்கான் பாராட்டியுள்ளார்.
Welcome back my friend @Russell12A so long since saw the ball fly so high!!! It takes a life of its own when U hit it Man! And @y_umesh wow! To @ShreyasIyer15 & team well done.Have a happy nite boys.
— Shah Rukh Khan (@iamsrk) April 1, 2022
மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றியுடன் தற்பொழுது கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மூன்று போட்டிகளில் 95 ரன்கள் குவித்த ரசல் அதிக ரன்கள் குவித்த வீரராகவும், மூன்று போட்டிகளில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றிய உமேஷ் யாதவ் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராகவும் வலம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.