சூர்யாவுக்கு மட்டுமில்லை மொத்த இந்திய அணிக்கும் எங்களிடம் திட்டம் இருக்கு – பாபர் ஆஸம் அதிரடி கருத்து!

0
1077
Babarazam

கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதி 10 விக்கெட் வித்தியாசத்தில் படு தோல்வியைச் சந்தித்தது. இந்த தோல்விதான் ஒட்டுமொத்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் முதல் தோல்வி!

முதல் போட்டி தோல்வியால் அடுத்து நியூசிலாந்து அணியுடன் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாய நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டு, அழுத்தம் நெருக்கடி அதிகரித்து உத்வேகம் இழந்து தோல்வியை தழுவி முதல் சுற்றோடு வெளியேறியது.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய கிரிக்கெட்டில் நிறைய அதிர்வலைகளை உருவாக்கியது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஆடும் முறையை மாற்றி அமைக்க வேண்டிய அளவுக்கு தேவைகள் உருவானது.

புதிய கேப்டன் ரோகித் சர்மா, புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையில் புதிய ஆட்ட அணுகுமுறை மற்றும் புதிய அணி கலாச்சாரம் உருவாக்கப்பட்டு புதிய வீரர்கள் மற்றும் பழைய வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு, நிறைய பரிசோதனை முயற்சிகள் செய்யப்பட்டு, தற்போது ஒரு அணி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் மீண்டும் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் எட்டாவது உலக கோப்பை தொடரில் நாளை தனது முதல் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோத இருக்கிறது.

- Advertisement -

இந்த ஆட்ட தயாரிப்பு குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் கூறும்பொழுது ” எங்களிடம் சூரியகுமார் யாதவுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு வீரருக்கு எதிரான திட்டங்களும் இருக்கிறது. அந்தத் திட்டங்களை நாங்கள் சரியாக செயல்படுத்த முடியும் என்று நம்புகிறோம். ஷான் மசூத் குணமடைந்து விட்டார். அனைத்து சோதனைகளிலும் அவர் தேறி விட்டார். மெல்போன் ஆடுகளம் இரண்டு நாட்களாக மூடி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களிடம் தெளிவான பிளேயிங் 11 உள்ளது. பகர் ஜமான் காயத்திற்கான சிகிச்சை பெற்று வருவதால் அவர் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய பாபர் ஆசம்
” போட்டி மழையால் பாதிக்கப்பட்டு எத்தனை ஓவர் கொண்டதாக நடத்தப்பட்டாலும் நாங்கள் அதற்கு தயாராகவே இருக்கிறோம். முழுமையான போட்டி நடந்தால் அது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும். ஷாகின் பயிற்சிப் போட்டியில் மீண்டு வந்தது எங்களது பந்துவீச்சு துறையை பலமாக்கி உள்ளது. பிபிஎல் தொடரில் ஹாரிஸ்க்கு மெல்போர்ன் மைதானம் சொந்த மைதானம் ஆகும். அவர் பொறுப்பேற்றுக் கொண்ட விதத்தில் நாங்கள் ஷாகினை இழந்ததாக தெரியவில்லை ” என்று கூறியுள்ளார்!