ஐ.பி.எல்-ன் நான்காவது நாளான இன்று ஐந்தாவது ஆட்டத்தில், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், மகாராஷ்ட்ராவின் புனை மைதானத்தில் விளையாடி வருகின்றன.
டாஸில் வென்ற ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். ஹைதராபாத் அணி வேகப்பந்து வீச்சாளர்களாக இந்தியாவின் புவனேஷ்வர் குமார், நடராஜன், உம்ரான் மாலிக் ஆகியோரையும், வெஸ்ட் இன்டீசின் பாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ரொமாரியோ ஷெபார்ட்டையும் ஆடும் லெவனில் வைத்திருக்கிறது.
இதில் ஜம்மு-காஷ்மீருக்காக விளையாடி வரும் 23 வயது இளைஞர் உம்ரான் மாலிக்கின் வேகம் அனைவரையும் வியக்க வைக்கும் அளவுக்கும் இருக்கிறது. உம்ரான் மாலிக் தன் முதல் ஓவராக ஆட்டத்தின் நான்காவது ஓவரை வீசி 21 ரன்கள் கொடுத்திருந்தாலும், அந்த ஓவரில் அவர் அதிகபட்சமாக மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசி ஆச்சரியப்படுத்தினார். அந்த ஓவரில் அவரது ஒரு பந்தை மட்டுமே பட்லர் சரியாக ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவராக தன் இரண்டாவது ஓவரை வீச வந்த அவர், முதல் ஓவரில் தப்பித்த பட்லரை க்ளுவே இல்லாமல் அவுட் செய்து பெவிலியன் அனுப்பினார். அடுத்து ஆட்டத்தின் 15-வது ஓவரில், சிறப்பாய் ஆடிக்கொண்டிருந்த தேவ்தத் படிக்கல்லை ஸ்டம்புகள் சிதற வழியனுப்பி வைத்தார். முதல் ஓவரில் 21 ரன்கள் தந்திருந்தாலும், தனது தீ போன்ற வேகத்தால் அடுத்த மூன்று ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே தந்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். தற்போது இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளர் என்றால் அது உம்ரான் மாலிக்தான்!
Umran malik cleaned up paddikal!!😊 Sheer pace bowling.#IPL2022 pic.twitter.com/28eAdGK1qW
— Ashmin Aryal (@AryalAshmin) March 29, 2022
இருபது ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் பட்லர் 35 [28] சஞ்சு சாம்சன் 55 [27] படிக்கல் 41 [29] ஹெட்மயர் 33 [13] ஆகியோரின் பங்களிப்போடு 210 ரன்களை 6 விக்கெட் இழப்பிற்கு குவித்துள்ளது!