இந்திய அணி ஒரு டெஸ்ட் மற்றும் தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதற்கு முன்னர் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.
இந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களில் இன்று முதல் ஆட்டம் லீசெஸ்டர்சையர் அணியுடன் துவங்கியது. இந்தப் போட்டிக்காக இங்கிலாந்து மற்றும் லீசெஸ்டர்சையர் கவுன்டி அணியுடன் இந்திய அணி ஒரு ஒப்பந்தம் செய்திருந்தது. அதாவது இந்தப் போட்டியின் மூலம், இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் ஆட்டத்தில் இடம் பெறுவதற்காக, இந்திய அணி வீரர்கள் நால்வரை லீசெஸ்டர் அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே அது. அதன்படி ரிஷாப் பண்ட், செதேஷ்வர் புஜரா, பிரசித் கிருஷ்ணா, ஜஸ்ப்ரீட் பும்ரா ஆகிய நான்கு வீரர்கள் லீசெஸ்டர்சையர் அணியில் இடம் பெற்றனர்.
இந்தப் பயிற்சி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட் செய்வதாக அறிவித்து, சுப்மன் கில்லுடன் களமிறங்கினார். அணியின் ஸ்கோர் 35 ரன்களாக இருக்கும் பொழுது, 28 பந்தில் 21 ரன்களை அடித்திருந்த சுப்மன் கில் வில் டேவிஸ் பந்தில் ரிஷாப் பண்ட் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து ஹனுமா விகாரி உள்ளே வர, ரோமன் வால்கர் ஆட்டத்தின் 15.2 ஓவரில் வீசிய ஷார்ட் பந்தை, டீப் மிட்-விக்கெட் திசையில் ரோகித் சர்மா தூக்கியடிக்க, அதை அபிடின் சகன்டே கேட்ச் செய்தார். அவர் கேட்ச் செய்ததும் ரிஷாப் பண்ட் ஸ்லிப்பில் நின்றிருந்த லீசெஸ்டர்சையர் அணி வீரரோடு கைத்தட்டி மகிழ்ச்சி வெளிப்படுத்தி, கேட்ச் பிடித்த வீரரை நோக்கி பாராட்டவும் ஓடச் செய்தது வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. இந்தப் பயிற்சி போட்டியை வழக்கமான போட்டிக்குத் தரும் முக்கியத்துவத்தோடே இரு அணி வீரர்களும் விளையாடி வருகிறார்கள்.
அடுத்து களத்திற்கு விராட்கோலி வர, ஹனுமா விகாரி மூன்று ரன்னில் ரோமன் வால்கர் பந்திலும், ஸ்ரேயாஷ் ரன் இல்லாமல் பிரசித் கிருஷ்ணா பந்திலும் வெளியேறினர். இந்த விக்கெட்டிற்கு பிரசித் கிருஷ்ணாவுக்கு பேட்டிங்கில் இருந்த விராட் கோலியே டிப்ஸ் கொடுத்ததுதான் வினோதம்.
அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா 13 ரன்னில் ரோமன் வால்கர் பந்தில் வெளியேற, விராட் கோலியுடன் இணைந்த விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, இருவரும் இணைந்து 57 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பிறகு விராட்கோலி 33 ரன்னிலும், சர்துல் தாகூர் 6 ரன்னிலும் ரோமன் வால்கர் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். தற்போது தேனீர் இடைவேளையின் போது இந்திய அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களில் எடுத்திருக்கிறது. ஸ்ரீகர் பரத் 34 ரன்களோடும், உமேஷ் யாதவ் 8 ரன்களோடும் களத்தில் உள்ளனர்!
☝️ | Rohit (25) c Sakande, b Walker.
— Leicestershire Foxes 🏏 (@leicsccc) June 23, 2022
Rohit pulls a short ball from @RomanWalker17 up into the sky, @AbiSakande is under the catch. 👐@imVkohli walks to the middle. Watch him bat. 👇
🇮🇳 IND 50/2
𝐋𝐈𝐕𝐄 𝐒𝐓𝐑𝐄𝐀𝐌: https://t.co/adbXpw0FcA 👈
🦊 #IndiaTourMatch | #LEIvIND pic.twitter.com/5mxQJ5cLKK