நடுவர் அவுட் கொடுக்காத போதிலும் மைதானைத்தை விட்டு நேர்மையாக வெளியேறிய டி காக் – வீடியோ இணைப்பு

0
671
Q de Kock and Sandeep Sharma

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 42வது போட்டியில், எட்டு ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களில் வென்று, பத்துப் புள்ளிகளோடு புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்திலிருக்கும் லக்னோ அணியும், எட்டு ஆட்டங்களில் நான்கு ஆட்டங்களில் வென்று எட்டுப் புள்ளிகளோடு, புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்திலிருக்கும் பஞ்சாப் அணியும், மகாராஷ்ட்ரா மாநிலத்தின் புனே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

லக்னோ அணியில் மனீஷ்பாண்டே நீக்கப்பட்டு, கடந்த ஆட்டத்தில் சிறிய காயத்தால் விளையாடாத பந்துவீச்சாளர் ஆவேஷ்கான் சேர்க்கப்ட்டுள்ளார். சென்னை அணியுடனான கடந்த ஆட்டத்தில் விளையாடிய வீரர்களோடே பஞ்சாப் அணி களமிறங்கி உள்ளது.

- Advertisement -

முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பந்துவீச்சை தேர்வுசெய்ய, லக்னோ அணியின் பேட்டிங்கை துவங்க குயின்டன் டிகாக்கோடு களம்புகுந்த கேப்டன் கே.எல்.ராகுலை ரபாடா வெளியேற்றினார். அதற்கடுத்து இந்த முறை முதன்முதலாக மூன்றாமிடத்தில் தீபக் ஹூடா பேட்டிங் செய்ய வந்தார்.

இருவரும் சேர்ந்து விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டதோடு பவர்-ப்ளேவில் ரன் சேர்த்ததோடு, மிடில் ஓவர்களிலும் துரிதமாய் ரன் சேர்த்து முதல் பத்து ஓவர்களை தாண்டி சிறப்பாக அணியை நகர்த்திக்கொண்டு சென்றார்கள். இந்தநிலையில் ஆட்டத்தில் சந்தீப் சர்மா வீசிய 12வது ஓவரின் நான்காவது பந்தை டிகாக் அடிக்க முயற்சிக்க, அது தவறி கீப்பரிடம் தஞ்சமடைந்தது. இதற்கான அவுட் முறையீட்டை நடுவரிடம் பஞ்சாப் அணியினர் வைக்க, நடுவர் அவுட் இல்லையென்று கூறிவிட்டார். மேற்கொண்டு மூன்றாவது நடுவரிடம் போவது பற்றி பஞ்சாப் அணியினர் ஆலோசித்த வேளையில், யாரும் எதிர்பார்க்காதவாறு குயின்டன் டிகாக் தானாகவே நேர்மையாக களத்திலிருந்து வெளியேறினார். இது பலரால் தற்போது சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது!