” ஒருநாள் போட்டிகளை மொத்தமாக நீக்க வேண்டும் ” – வாசிம் அக்ரம் அதிர்ச்சி பேச்சு

0
183
Wwsim Akram

தற்போது கிரிக்கெட்டில் டி20 வடிவம் இரசிகர்களைப் பெரிய அளவில் ஈர்க்க கூடியதாய் இருக்கிறது. மேலும் அதைவிட பெரிய அளவில் ஐசிசி-க்கும், கிரிக்கெட் நாடுகளின் வாரியங்களுக்கும் வருமானத்தை தரக்கூடியதாய் இருக்கிறது!

டி20 கிரிகெட் போட்டிகள் மூன்றரை மணி நேரத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிவதால், போட்டிகள் பரபரப்பாய் சுவாரசியமாய் இருக்க வேண்டுமென்பதற்காக ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைக்கப்படுவதால், பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாய் கொட்டுவதால், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டுமே அல்லாமல், ஐ.பி.எல் போன்ற உரிமையாளர்கள் டி20 கிரிக்கெட் தொடர்களுக்கும் இரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருக்கிறது.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டின் வருகையும், எழுச்சியும், முந்தைய கிரிக்கெட் வடிவங்களான டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை உருவாக்கி உள்ளது. அவற்றின் இருப்பை தக்க வைப்பது ஐ.சி.சி-க்கு பெரிய சவாலான காரியமாக இருக்கிறது!

இதன் பொருட்டு டெஸ்ட் போட்டிகளைக் காப்பதற்காக, டெஸ்ட் போட்டிகளில் முடியும் தெரியும் வகையில் ஆடுகளங்கள் அமைக்கப்படுகின்றன. அணிகளும் முடிவுக்காக விளையாடுகின்றன. இதனால் தற்போது டெஸ்ட் போட்டிகள் அதிகம் டிராவில் முடிவதில்லை. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பணக்கார கிரிக்கெட் நாடுகளால் இரசிகர்களிடையே டெஸ்ட் போட்டிகளுக்கான ஆதரவு கொஞ்சம் அதிகரிக்கவே செய்திருக்கிறது!

டெஸ்ட் போட்டிகளைக் காக்க சரியான முடிவெடுத்த ஐ.சி.சி ஒருநாள் போட்டிகளில் தவறான முடிவை எடுத்துவிட்டது. ஒருநாள் போட்டிக்கு இரண்டு முனைகளிலும் இரண்டு புதிய பந்து, பத்து ஓவர்களுக்கு அடுத்து நாற்பதாவது ஓவர் வரை வெளியில் நான்கு பீல்டர்கள் என விதிகளை மாற்றி, ஆடுகளங்களையும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைத்து, டி20 கிரிக்கெட் வடிவத்தின் நீண்ட வடிவமாக ஒருநாள் போட்டியை மாற்ற, இது இரசிகர்களுக்குச் சுவராசியமாக அமையவில்லை. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் சலிப்படைய ஆரம்பித்துவிட்டது!

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் போட்டி காக்கப்பட வேண்டுமென்றால் மீண்டும் ஒரு அணிக்கு ஒரே ஒரு பந்து, பவர்-ப்ளே முடிந்து வெளியே ஐந்து பீல்டர்கள் இருக்க வேண்டும் என்று குரல்கள் பலமாக எழத் துவங்கிவிட்டன. இந்திய வீரர் அஷ்வினும் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். மேலும் ஒருநாள் போட்டி அதிகளவில் உழைப்பை வாங்குவதால், அதிகப்படியான போட்டிகளில் வீரர்களால் விளையாட முடியாமல் போகிறது. சமீபத்தில் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது!

இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் லெஜன்ட் பாஸ்ட் பவுலர் வாசிம் அக்ரம் ஒரு புதிய கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அவர் “ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை நிரந்தரமாக நிறுத்தவேண்டும். அதுவொரு இழுவையாக இருக்கிறது” எனக் கூறி அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார்!