இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது!
வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் எட்டு விக்கெட்டுகள் கைவசம் இருக்க கடைசி நாளான இன்று அந்த அணியின் வெற்றிக்கு 289 ரன்கள் தேவைப்படுகிறது.
இந்தப் போட்டியில் மழையின் குறுக்கீடு மிக அதிகபட்சமாக இருப்பதால் நேரம் அதிகமாக வீணாகி வருகிறது. அதே சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் போட்டியை டிரா செய்யும் நோக்கத்திலேயே ஆரம்பத்திலிருந்து மிக மெதுவாக விளையாடுகிறார்கள்.
இந்த காரணத்தால் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டை டி20 கிரிக்கெட் போல விளையாடியது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 35 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
மேலும் பேட்டிங்கில் நான்காவது இடத்தில் விராட் கோலிக்கு பதிலாக வந்த இஷான் கிஷான் 33 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். மேலும் அவருக்கு இது முதல் டெஸ்ட் கிரிக்கெட் அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கெட் கீப்பராக செயல்பட்ட இஷான் கிஷான் நேற்று 33 பந்தில் சதம் அடித்ததின் மூலம், 2006 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக 34 பந்தில் விக்கெட் கீப்பராக மகேந்திர சிங் தோனி அரை சதம் அடித்திருந்ததை முந்தினார்.
மேலும் இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். இவர் 2022ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 28 பந்துகளில் அரை சதம் அடித்து, இந்திய அணிக்காக மிகக் குறைந்த பந்தில் அரை சதம் அடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தன் வசம் வைத்திருக்கிறார்.
நேற்று பேட்டிங்கில் விராட் கோலி இடத்தில் தான் வந்தது எப்படி என்று பேசி உள்ள இஷான் கிஷான் ” என்னை இந்த நான்காவது இடத்தில் அனுப்பியதே விராட் கோலி பைய்யாதான். இடது கை சுழற் பந்துவீச்சாளர் பந்து வீசுவார் என்று அவருக்கு தெரியும். இந்த காரணத்தால் ஒரு இடது கை பேட்ஸ்மேன் விளையாடுவது சரியாக இருக்கும் என்று நினைத்த அவர் என்னை இந்த இடத்தில் விளையாட அனுப்பினார் ” என்று கூறி இருக்கிறார்.
மேலும் நேற்று ஆர்பி 17 என்ற எழுத்துக்கள் பொறித்த பேட்டில் விளையாடினார். இது ரிஷப் பண்ட் பெயரின் சுருக்கம் மற்றும் அவரது ஜெர்சி எண் ஆகும். இதேபோல் ரிஷப் பண்ட் ஒற்றை கையில் சிக்சர் அடிப்பதில் சிறந்தவர். நேற்று அவரைப் போலவே ஒற்றைக் கையில் சிக்சர் அடித்து தனது முதல் டெஸ்ட் அரை சதத்தை நிறைவு செய்தார்.
ரிஷப் பண்ட் பற்றி பேசிய இஷான் கிஷான் ” இந்தச் சுற்றுப்பயணத்திற்கு வருவதற்கு முன்பாக நான் என் சி ஏ வில் இருந்தேன். ரிஷப் பண்டும் அங்கு பயிற்சியில் இருந்தார். நான் விளையாடக்கூடிய நிலைக்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர் எனக்கு சில விஷயங்களை கூறினார். மேலும் நாங்கள் பல போட்டிகளில் ஒன்றாக விளையாடி உள்ளதால் எனக்கு அவர் உதவி செய்தார். எனவே அவருடன் சிறந்த உரையாடலை செய்வதற்கான நேரமாக அது அமைந்தது. நான் அவருக்கு இந்த நேரத்தில் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!
The moment Ishan Kishan completed his Maiden Test fifty, he completed in just 33 balls.
— CricketMAN2 (@ImTanujSingh) July 23, 2023
A moment to remember for Ishan Kishan forever! pic.twitter.com/V1BzW4O7wC