வீடியோ.. 23 பந்தில் 50 ரன்.. மனிஷ் பாண்டேவின் அதிரடி பேட்டிங் மற்றும் அபார ஃபீல்டிங்கால் சாம்பியன்.!

0
330

தற்போது இந்தியாவின் பல மாநிலங்களிலும் அந்தந்த கிரிக்கெட் வாரியங்களுக்கான டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக டிஎன்பிஎல் நடத்தப்படுவது போல் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக மகாராஜா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில தினங்களாக பெங்களூரில் நடைபெற்று வந்தது.

இந்தத் தொடரின் இறுதிப்போட்டி நேற்று கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் மகாராஜா வாரியர்ஸ் மற்றும் ஹூப்ளி டைகர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் மனிஷ் பாண்டே தலைமையிலான ஹூப்ளி டைகர்ஸ் அணியினர் வெற்றி பெற்று மகாராஜா கோப்பையை கைப்பற்றினர். பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டி பல திருப்பங்களும் சுவாரசியங்களும் நிறைந்ததாக இருந்தது.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஹூப்ளி டைகர்ஸ் அணி மிகச் சிறப்பாக விளையாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 203 ரன்களை எடுத்தது. அந்த அணியின் துவக்க வீரர் லுவித் சிசோதியா துவக்கத்திலேயே விரைவாக ஆட்டம் இழந்த போதும் முகமது தாஹா மற்றும் கிருஷ்ணன் ஸ்ரீஜித் சிறப்பாக விளையாடி 89 ரன்கள் சேர்த்தனர்.

ஸ்ரீஜித் 38 பந்துகளுக்கு 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த நிலையில் சிறப்பாக விளையாடிய முஹம்மது தாஹா 40 பந்துகளில் 7 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உதவியுடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து ஆட வந்த கேப்டன் மணிஷ் பாண்டே நான்கு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 50 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் 203 ரன்கள் எடுத்தது ஹூப்ளி டைகர்ஸ் அணி.

இதனைத் தொடர்ந்து 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மைசூர் வாரியர்ஸ் அணியினருக்கு துவக்க வீரர்களான கார்த்திக் மற்றும் சமர்த் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில் கார்த்திக் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த சமர்த் 35 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் கருண் நாயர் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க மைசூர் அணி 20 ஓவர்களில் 195 ரன்கள் எட்டு விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது.

- Advertisement -

ஆட்டத்தின் இறுதி நான்கு பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மைசூர் அணியின் ஆல் ரவுண்டரான ஜெகதீசா சுஜித் ஹூப்ளி அணியின் மாவந்த் குமார் வீசிய பந்தை லாங் ஆண் திசையில் உயரமாக தூக்கி அடித்தார். அந்தப் பந்து சிக்ஸருக்கு போகும் என்று அனைவரும் நினைத்த நிலையில் மனிஷ் பாண்டே சிறப்பான ஃபீல்டிங் ஆறு ரன்களுக்கு போக இருந்ததை ஒரு ரன்னோடு நிறுத்தியது.

இதன் காரணமாக ஜெகதீசா சுஜித் அடுத்த பந்தில் ஸ்ட்ரைக் எடுக்கவும் முடியவில்லை. மறுமுனையில் இருந்த பந்துவீச்சாளரை வைத்து எளிதாக கடத்தி எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஹூப்ளி அணி . பந்துவீச்சில் வித்வாத் கவரப்பா மற்றும் மாவன்த் குமார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கரியப்பா மற்றும் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய 72 ரன்கள் எடுத்த முகமது தாஹா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மேலும் இந்தப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் பேசிய கேப்டன் மணிஷ் பாண்டே பேட்டிங் மற்றும் பில்டிங்கின் மூலம் அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்ததாக தெரிவித்தார். மேலும் மைதானத்தின் பராமரிப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்து அவர் இந்தத் தொடருக்காக மிகச் சிறப்பான ஆடுகளங்களை தயார் செய்ததாக மிகவும் பாராட்டினார்.