உம்ரான் மாலிக்கின் எதிர்காலம் அவர் கையில்தான் உள்ளது ; இதைச் செய்தால் இந்திய அணியில் தொடர்ந்து ஆடலாம் – சவுரவ் கங்குலி அளிக்கும் டிப்ஸ்

0
104
Umran Malik and Sourav Ganguly

நடப்பு ஐ.பி.எல் தொடரின் மொத்தம் 70 லீக் போட்டிகள், மும்பை, நவிமும்பை, புனே நகரங்களில் முடிவடைந்து, குஜராத், ராஜஸ்தான், லக்னோ, பெங்களூர் அணிகள் ப்ளேஆப்ஸ்க்கு, தகுதி பெற்று, கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் ப்ளேஆப்ஸ் போட்டிகள் நடந்து வருகிறது.

இந்த 70 போட்டிகளின் முடிவில் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்கள் சரிவை சந்தித்திருக்க, இந்திய அணிக்கு விளையாடிடாத இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் பலர் வெளியே தெரிந்திருக்கின்றனர். ஐ.பி.எல் தொடருக்கு அடுத்து, இருபது போட்டி தொடரில் விளையாட தென் ஆப்பிரிக்க அணி வருகிறது. இந்தத் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, மொகம்மத் ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, கே.எல்.ராகுலின் தலைமையில் ஒரு இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருந்தது. தினேஷ்கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பியிருந்தார்கள். அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் என இரண்டு இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் வாய்ப்பு பெற்றிருந்தனர். ஷிகர் தவான், மோசின் கானிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

இதில் காஷ்மீரைச் சேர்ந்த உம்ரான் மாலிக் தொடர்ந்து மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசும் தனித்திறனோடு இருக்கிறார். இந்த ஐ.பி.எல் தொடரில் 157 கி.மீ வேகத்தில் வீசி அசத்தியும் இருக்கிறார்கள். மேலும் இந்தந் தொடரில் இவர் 14 ஆட்டங்களில் 22 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். 13 ரன்களை தரும்போது ஒரு விக்கெட்டை கைப்பற்றும் அளவில் சிறப்பாக இருக்கம் இவர் ஓவருக்கு 9.50 ரன்களை விட்டுத்தருவது சற்று கவலையாய் இருக்கிறது.

இவரைப் பற்றி தற்போது இந்திய கிரிக்கெட் போர்டின் தலைவர் சவுரவ் கங்குலி கூறியிருப்பதாவது, “அவரது எதிர்காலம் அவரது கைகளில்தான் இருக்கிறது. அவர் உடல் தகுதியுடன் இருந்து இதே வேகத்தில் தொடர்ந்து பந்து வீசி வந்தால், நீண்டகாலம் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “இந்த ஐ.பி.எல் தொடரில் பல வீரர்கள் சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக திலக் வர்மா, சன் ரைசர்ஸ் அணிக்காக ராகுல் திரிபாதி, குஜராத் அணிக்காக ராகுல் திவாட்டியா ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள். உம்ரான் மாலிக், மோசின் கான், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் போன்ற இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடுகளையும் பார்த்தோம். இந்தக் களம் திறமைகள் வெளிப்படுவதற்கான இடமாக உள்ளது” என்று கூறினார்!

- Advertisement -