போன சீஷன்ல இருந்தே தலைவன் ரோகித் சர்மா கூட ஆடணும்னு இருந்தேன்.. இப்போதான் நிறைவேறிருக்கு.. சின்ன வயசு கனவு இது – நெகிழ்ச்சியுடன் பேசிய திலக் வர்மா!

0
287

மும்பை இந்தியன்ஸ் ரசிகனாக இருந்ததிலிருந்து ரோகித் சர்மாவுடன் ஒருநாள் பேட்டிங் செய்ய வேண்டும் என்று கனவு கண்டேன். அது டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் நிறைவேறிவிட்டது என்று மனம்திறந்து பேசியுள்ளார் திலக் வர்மா.

இந்த வருட ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகள் விளையாடி இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி கடைசியாக நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

பேட்டிங், பௌலிங் இரண்டிலும் மும்பை அணி படுமோசமாக செயல்பட்டு வந்தாலும், அணிக்கு 22 வயதான இளம் வீரர் திலக் வர்மா மிகுந்த நம்பிக்கை உடன் பேட்டிங்கில் நம்பிக்கை அளித்து வருகிறார். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஒற்றை ஆளாக நின்று கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 84 ரன்கள் சேர்த்தார். சிஎஸ்கே அணியுடனான போட்டியிலும் 22 ரன்கள் அடித்து நல்ல துவக்கம் கொடுத்தார்.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் முதல் விக்கெட் போன பிறகு, ரோகித் சர்மாவுடன் பேட்டிங் செய்து 41 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இவரும் ரோகித் சர்மாவும் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 67 ரன்கள் சேர்த்தனர். இது தான் வெற்றி பெற மிகவும் உதவியது.

கடந்த சீசனில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் திலக் வர்மா, முதல் முறையாக ரோகித் சர்மாவுடன் இணைந்து களத்தில் விளையாடினார். இதற்கு முன்பு வரை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் முதல் முறையாக ரோகித் சர்மாவுடன் இணைந்து விளையாடியது பற்றி போட்டி முடிந்த பிறகு, ரோகித் சர்மா மற்றும் திலக் வர்மா இருவரும் உரையாடியபோது இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டு கனவு நனைவானதாக கூறினார் திலக் வர்மா. அவர் பேசியதாவது:

“கடந்த சீசனில் இருந்தே ரோகித் சர்மாவுடன் எப்போது விளையாட முடியும் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். சிறுவயதிலிருந்தே மும்பை இந்தியன்ஸ் ரசிகராக இருந்து வரும் நான். பல வருடங்களாக ரோகித் சர்மாவுடன் இணைந்து பேட்டிங் செய்ய வேண்டும் என்று கனவு கண்டுக்கொண்டிருந்தேன். மும்பை அணிக்கு எடுக்கப்பட்டவுடன் கடந்த சீசனில் இது நடந்து விடும் என்று எதிர்பார்த்தேன். துரதிஷ்டவசமாக நடக்காமல் போனது. இம்முறை அந்த வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்றார்.

இதற்கு சட்டென்று நகைச்சுவையாக, “டேய்! கொஞ்சம் வாயை மூடு. நான் இங்கே தான் இருக்கிறேன்.” என்றபடி ஹிந்தியில் பதில் கொடுத்தார் ரோகித் சர்மா.