நடப்பு ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் ஆசியக் கண்டத்து இந்திய நாட்டில் நடக்கின்ற காரணத்தினால், ஆசியக் கிரிக்கெட் நாடுகள் மிகச் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த வகையில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஆசிய நாடுகளாக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மட்டுமே இருக்கின்றன.
1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான், 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை இரண்டு நாடுகளும், நடப்பு உலக கோப்பை தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கின்றன.
இதில் பாகிஸ்தான் அணி எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற வகையில் விளையாடவில்லை என்பது உண்மை. ஆனால் அவர்கள் நடப்பு உலகக்கோப்பை தொடரில் நான்கு வெற்றிகளை பெற்றிருக்கிறார்கள். மேலும் அவர்களுக்கு ஒரு போட்டி எஞ்சி இருக்கிறது.
ஆனால் இதில் இலங்கைதான் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறது. மேலும் 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் தகுதி பெறாமல் உலகக்கோப்பையில் இருந்து வெளியேறி இருக்கிறது.
இந்த நிலையில் உலகக்கோப்பை நடந்து கொண்டிருக்கும் பொழுதே சில நாட்களுக்கு முன்பு இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டது. இடைக்கால குழு ஒன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா ஆகியோரைக் கொண்டு அமைக்கப்பட்டது. ஆனால் இந்தக் குழுவும் நீதிமன்ற விசாரணைக்கு சென்று நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் அதிரடியாக ஐசிசி சர்வதேச கிரிக்கெட்டில் உறுப்பு நாடு என்கின்ற அந்தஸ்தில் இருந்து இலங்கையை நீக்கி இருக்கிறது. ஐசிசியின் இந்த அதிரடி மற்றும் திடீர் நடவடிக்கை கிரிக்கெட் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இலங்கை கிரிக்கெட் அமைப்பு தன்னாட்சியாக சுயமாக நேர்மையாக இயங்காமல், அரசாங்கத்தின் உள் தலையீடுகளோடு, சரியான முறையில் இயங்காத காரணத்தினால், ஐசிசி இலங்கை கிரிக்கெட் அணியை உறுப்புநாடு அந்தஸ்திலிருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது!