விராட் கோலியை கௌரவப்படுத்தும் ரோகித் சர்மா – ட்விட்டர் இணைப்பு!

0
1707
Rohitsharma

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் உடன் தோல்வியைத் தழுவிய காரணத்தால் முதல் சுற்றோடு வெளியேறி வந்தது.

இந்தத் தோல்வி இந்திய கிரிக்கெட்டில் குறிப்பாக இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பெரிய மாற்றங்களை உருவாக்கியது. காரணம் இந்தத் தோல்வியின் மீது கடுமையான விமர்சனங்கள் இருந்தது. பிசிசிஐ ஏதாவது செய்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருந்தது.

- Advertisement -

இந்தநிலையில் விராட் கோலி தனது கேப்டன் பதவியை விட்டு நகர, பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பணிக்காலம் முடிய, புதிய கேப்டனாக ரோகித் சர்மா மற்றும் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருவரும் வந்தார்கள்.

இவர்களுக்கு இலக்காக வழங்கப்பட்டது தற்போது நடந்து கொண்டிருக்கும் டி20 உலக கோப்பை மற்றும் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்கள்தான். இவர்கள் இருவரும் சேர்ந்து இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் செய்த எல்லா நகர்வுகளும் இந்த இரண்டு உலகக் கோப்பை தொடர்களை மனதில்கொண்டே செய்யப்பட்டது.

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் இறுதிப் போட்டியை எட்ட முடியாமல் வெளியேறி பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் அடுத்து தற்போது நடக்கும் டி20 உலக கோப்பையில் இந்திய அணி வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்றே கூறலாம்.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று பாகிஸ்தானுடன் மோதிய போட்டியில் இந்திய அணி ஏறக்குறைய 99% தோல்வியின் புறமாய் சென்றுவிட்டது. 1% வெற்றிக்கு வாய்ப்பு இருந்ததை எடுத்துக் கொண்டு விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா போராடி இந்திய அணியை வெல்ல வைத்தார்கள். குறிப்பாக விராட் கோலியின் பேட்டிங் அசுரத்தனமாக இருந்தது. அவரது ஆட்டம் தான் இந்திய அணியின் வெற்றிக்கான மிக முக்கிய ஆயுதமாக விளங்கியது.

கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு இந்த உலகக் கோப்பை தொடரில் இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்து இருந்தால், அடுத்து தென்ஆப்பிரிக்கா அணி உடன் நடக்கும் போட்டியில் கட்டாயம் வென்றே ஆகவேண்டும். கடந்த உலகக் கோப்பை தொடர் போலவே சூழல்கள் மாறி இருக்கும். ஆனால் விராட் கோலி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஏற்பட இருந்த நெருக்கடியை தன் ஆட்டத்தால் அப்படியே மாற்றி விட்டார். நேற்று விராட் கோலியை மைதானத்தில் ரோகித் சர்மா தூக்கிக் கொண்டாடியபோதே, விராட் கோலி எவ்வளவு முக்கியமான இன்னிங்சை ஆடி இருக்கிறார் என்று பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கும்.

தற்போது விராட் கோலியை கவுரவிக்கும் பொருட்டாகவும் கொண்டாடும் பொருட்டாகவும் ரோகித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலியின் புகைப்படத்தை பதிவேற்றி இருக்கிறார். இதற்கான ட்விட்டர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!