பிசிசிஐ இந்திய அணியின் புதிய டி 20 கேப்டனாக ரோஹித் ஷர்மாவை நியமித்துள்ளது. அதேபோல புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணி வெளியேறிய சோகத்தில் இருந்து இன்னும் வெளிவர முடியாமல் இந்திய ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
அவர்களின் சோகத்தை குறைக்கும் விதமாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இன்று முதல் நடைபெற இருக்கிறது.
2012 ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி இரஞ்சி டிராபி தொடரில், மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா முதல்முறையாக பொறுப்பேற்று அந்த அணியை வழிநடத்தினார். போட்டி நடைபெறுவதற்கு முன்பாக அவர் தன்னுடைய டுவிட்டர் வலைத்தளத்தில் ஜெய்ப்பூரை வந்து அடைந்து விட்டோம்.
முதல் முறையாக கேப்டனாக பதவியேற்று அணியை வழிநடத்த போகிறேன். கூடுதல் பொறுப்பு தற்பொழுது எனக்கு வந்துவிட்டது. கிடைத்து பொறுப்பை சரியாக பின்பற்றுவேன் என்று அந்த பதிவில் கூறியிருந்தார்.
இந்திய அணியின் முழு நேர டி20 கேப்டனாக ரோஹித் ஷர்மா இன்று முதல் புதிய பொறுப்பேற்று இந்திய அணியை வழிநடத்த போகிறார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் அவர் இன்று மீண்டும் அதே ஜெய்ப்பூர் நகரில் முதல் முறையாக இந்திய அணியை கேப்டனாக வழி நடத்த போகிறார் என்பதுதான். தற்செயலாக நடந்த ஒன்று என்றாலும், இதை பற்றி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆச்சரியப்படும் விதத்தில் பேசிக்கொண்டு வருகின்றனர்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி 7 மணிக்கு ஆரம்பமாகும்.