அடுத்த டி20 உலக கோப்பைக்குள் ரிஷப் பண்ட்டை துவக்க வீரராக அல்லது மூன்றாவது இடத்தில் களமிறக்க வேண்டும் என்று பேசி உள்ளார் ராபின் உத்தப்பா.
டி20 உலக கோப்பை அணியில் ரிஷப் பண்ட்டை அழைத்துச் சென்று சரியாக பயன்படுத்தவில்லை என்ற விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இடதுகை பந்துவீச்சுக்கு திணறினர்.
அந்த நேரத்தில் இடது கை பேட்ஸ்மேன் பண்ட் துவக்க வீரராக களமிறக்கப்பட்டு இருந்தால், அதனை எதிர்கொண்டு நல்ல துவக்கம் கொடுத்திருக்க வாய்ப்பிருந்தது. ஆனால் இரண்டு போட்டிகளில் மட்டுமே அவரை இந்திய அணி பயன்படுத்தியது.
அவருக்கு என்று சரியான இடம் கொடுக்காமல் முன்னும் பின்னும் களம் இறக்கி வந்தனர். ரோகித் சர்மா வெறும் 116 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார் இவருடன் சேர்ந்து துவக்க வீரராக களமிறங்கிய கேஎல் ராகுலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகினார்.
இந்நிலையில் ரிஷப் பன்ட் விரைவில் துவக்க வீரராக மாற்றப்பட வேண்டும். அவரை சரியாக இந்திய அணி பயன்படுத்த வேண்டும். 2024 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு இதுதான் சரியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் ராபின் உத்தப்பா.
“2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வெஸ்ட் இண்டீஸ் அல்லது அமெரிக்கா மைதானங்களில் நடைபெறுகிறது. அந்த மைதானங்களுக்கு ரிஷப் பண்ட் சரியான வீரராக இருப்பார். அவரை டாப் ஆர்டரில் விளையாட வைக்க இந்திய அணி முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக துவக்க வீரராகவோ அல்லது மூன்றாவது இடத்திலோ களம் இறக்க வேண்டும்.
ஐபிஎல் போட்டிகளில் பண்ட் விளையாடுவதை பார்த்தால், டாப் ஆர்டரில் நல்ல பங்களிப்பை கொடுத்திருக்கிறார். மேலும் பல போட்டிகளில் நின்று விளையாடி வெற்றிகளையும் பெற்று தந்திருக்கிறார். லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணி அவரை சரிவர பயன்படுத்தவில்லை. இனியும் அந்த தவறுகள் நடக்காமல் டாப் ஆர்டரில் விளையாட வைத்து பார்க்க வேண்டும்.” என்றார்.