ஐபிஎல் 2024

20 ரன் கம்மியா எடுத்துட்டோம்னு நினைச்சோம்.. ஆனா எங்க வெற்றிக்கு காரணம் இதுதான் – ஜடேஜா பேட்டி

இன்று இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் சிஎஸ்கே அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்று, வெற்றிக்கான காரணங்கள் குறித்து பேட்டி தந்திருக்கிறார்.

- Advertisement -

இன்றைய போட்டியிலும் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு ரவீந்திர ஜடேஜா மட்டும் தாக்குப் பிடித்து விளையாடி 26 பந்துகளில் 43 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார். இவரது கடைசி நேர பேட்டிங் காரணமாக சிஎஸ்கே அணி 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.

இதற்கடுத்து பேட்டிங் செய்ய வந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் மட்டுமே 23 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. சி எஸ் கே அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் ஆறாவது வெற்றி பெற்றது. ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் நான்கு ஓவர்களுக்கு 20 ரன்கள் மட்டும் தந்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற ரவீந்திர ஜடேஜா பேசும் பொழுது “இது பகலில் நடக்கும் போட்டி என்கின்ற காரணத்தினால், விக்கெட் நன்றாக டிரையாக மாறி பந்து மெதுவாக வந்தது. எங்களிடம் நல்ல பவர்பிளே இருந்தது. ஆனால் மிடில் ஓவர்களில் எங்களுக்கு நல்ல பார்ட்னர்ஷிப் அமையவில்லை. இதன் காரணமாக நல்ல பார்ட்னர்ஷிப் உருவாக்க முயற்சி செய்தேன்.

- Advertisement -

எங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்கள் பவர் பிளேவில் சிறப்பாக பதிவு செய்தார்கள். துஷார் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் நானும் சான்ட்னரும் மிடில் ஓவர்களில் எங்கள் வேலையை செய்தோம். பவர் பிளேவில் எப்பொழுதும் ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக தெரிகிறது. ஆனால் அதற்குப் பிறகு பந்து பழைய ஆனதும் பேட்டிங் செய்ய எளிதாக இருப்பதில்லை. மேலும் ஒரு புதிய இடத்திற்கு வரும் பொழுது ஆடுகளம் எவ்வளவு ஒத்துழைக்கும் என்பது குறித்து நமக்கு எதுவும் தெரியாது.

நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாக இருப்பதாகத்தான் நினைத்தோம். ஆனால் நாங்கள் பவர்பிளை மற்றும் மிடில் ஓவர்களில் லூஸ் டெலிவரிகளை வீசவில்லை. ஒரு பேட்டராக என்னுடைய வேலை, பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும், இறுதிக் கட்டத்தில் வேகமாக விளையாட வேண்டும். சில நேரம் பவர் பிளேவில் விக்கெட்டுகள் வேகமாக விழும் பொழுது நமக்கு ரன் வேகம் இருக்காது. நாம் எப்பொழுதும் வெற்றி பெறும் போட்டிகளில் எல்லா பக்கத்திலும் சிறப்பாக விளையாடி இருப்போம்” என்று கூறியிருக்கிறார்.

Published by