“அந்த ஒரு தோல்வியால் இந்திய அணி நிறைய சேதாரமடைந்துவிட்டது” – பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப்

0
320
Ind vs pak

இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடத்திலிருந்து பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு குழப்பமான சூழ்நிலையில்தான் விளையாடி வருகிறது. காரணம், விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதும், ரன் மெசினாய் விளங்கிய அவரது பேட்டிங் பார்ம் சரிந்ததுமே!

இதனால் ஒரு புதிய கலவையுடன் ஒரு புதிய அணியைக் கட்டமைக்கவேண்டிய பொறுப்பும், ஒரு புதிய அணி கலாச்சாரத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பும் புதிய கேப்டன் ரோகித் சர்மாவுக்கும், புதிய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் இருந்தது!

- Advertisement -

இந்திய அணிக்கு கேப்டன் மாறுகையில் அதிக சலசலப்பும், சேதாரங்களும் இல்லாமல் எல்லாம் இயல்பாய் அமைந்தது மகேந்திர சிங் தோனி விராட் கோலியிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்கும் போதுதான். விராட் கோலியிடம் ஒப்படைத்த பின்பும் அவர் தலைமையிலும் தோனி எந்த வேறுபாடுகளும் இல்லாமலே சில ஆண்டுக்காலம் விளையாடினார். ஆனால் இது மற்றவர்களுக்கு நடக்கவில்லை!

இப்படியான சூழலில் விராட்கோலி கடைசியாய் இந்திய டி20 அணிக்கு கேப்டனாய் இருந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி மிகப்பெரிய தோல்விகளைச் சந்தித்து தொடரின் முதல் சுற்றோடு வெளியேறி அதிர்ச்சி அளித்தது. பயிற்சி ஆட்டத்தில் காட்டிய வேகத்தை தொடரில் காட்டவில்லை. இந்தத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக பத்து விக்கெட் வித்தியாசத்தில் மோசமாய் தோற்றது.

பின்பு ரோகித் சர்மா கேப்டனாய் வந்து ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் அணியின் ஆட்ட அணுகுமுறை மாற்றப்பட்டு, புதிய வீரர்களைப் பரிசோதித்து இப்பொழுதுதான் இந்திய அணி டி20 வடிவத்தில் மீண்டு எழ ஆரம்பித்திருக்கிறது. தற்போது வெஸ்ட்இன்டீஸ் சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய அணி, அடுத்து யுஏஇ-ல் நடக்கும் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணியோடு மோத இருக்கிறது. டி20 உலகக்கோப்பையிலும் மோத இருக்கிறது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

தற்போது இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரசீத் லத்தீப் பேசி இருக்கிறார். அதில் “இந்திய அணியின் மனதில் தற்போது உலகக்கோப்பை இருக்காது. அவர்கள் அதைத் தொடராகத்தான் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் மனதில் தற்போது ஆசியக் கோப்பை போட்டிதான் இருக்கும். ஏனென்றால் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியுடனான தோல்வி இந்திய அணிக்கு நிறைய சேதாரங்களை உருவாக்கி விட்டது. அதனால் அவர்கள் அதிலிருந்து மீள முயற்சி செய்து வருகிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசியிருக்கும் அவர் “சமீபக் காலங்களில் பரம எதிரி அணிகளான பாகிஸ்தான் இந்தியா மோதலில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் வென்றது பாபர் சகாக்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். யுஏஇ-ல் உள்ள சூழ்நிலை பாகிஸ்தான் அணிக்குப் பழக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அனைத்தையும் கொடுத்து அர்ப்பணிப்போடு விளையாடும். பாகிஸ்தான் அணி வென்ற ஆட்டத்திலிருந்து திட்டங்களோடு போகும்” என்றும் கூறி இருக்கிறார்!