இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வெகு மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இன்று 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி தலைமையில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் 70 ஓவர்கள் விளையாடி 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் இந்திய அணி குவித்துள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 246 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் என 120 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் மிக சுமாராக விளையாடிய மயங்க் அகர்வால் இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளிலேயே அபாரமாக சதமடித்து, தன்னை குறை கூறிய அனைவரையும் பாராட்ட வைத்துள்ளார்.
ராகுல் டிராவிட் என்னிடம் சொன்ன ஒரு சில வார்த்தைகள்
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நான் தேர்வானதும் ராகுல் டிராவிட் என்னிடம் ஒரு சில விஷயங்களை கூறினார். நம் கையை மீறி ஒரு சில விஷயங்கள் நமக்கு நடைபெறும், அப்பொழுது நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒரு சில விஷயங்களை கண்டு கொள்ளாமல் இருப்பதே நல்லது. வாய்ப்பு நிச்சயம் நமக்கு தேடி வரும். அப்படி நமக்கு வரும் வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ராகுல் டிராவிட் என்னிடம் அறிவுரை கூறினார் என்று மயங்க் அகர்வால் கூறியுள்ளார்.
26 இன்னிங்ஸ்களில் 4 அரைசதங்கள், 4 சதங்கள் மற்றும் 2 இரட்டை சதம் குவித்து நல்ல ரெக்கார்டை மயங்க் அகர்வால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தன் கைவசம் வைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பொருத்தவரையில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 48.08 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 53.23 ஆகும்.
நாளை 2வது நாள் ஆட்டத்தில் மயங்க் அகர்வால் இன்னும் 80 ரன்கள் கூடுதலாக அடித்து தன்னுடைய மூன்றாவது இரட்டை சதத்தை குவிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் தற்பொழுது அனைத்து இந்திய ரசிகர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.