பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி ஐந்து நாட்களுக்கு முன்பு தொடங்கி இன்று நடந்து முடிந்திருக்கிறது!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்நாட்டில் நடைபெறும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு தொடர்ந்து பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளத்தையே அமைத்து பலரது விமர்சனத்தை சம்பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் இந்தப் போட்டியும் அதற்கு விதிவிலக்காக அமையவில்லை!
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் கிரவுலி மற்றும் டன் கட் இருவரும் சதம் அடித்தார்கள். இதற்கு அடுத்து போப் மற்றும் ஹாரி புரூக்ஸ் இருவரும் சதம் அடிக்க இங்கிலாந்து அணி நான்கு பேட்ஸ்மேன்களின் சதங்களோடு முதல் இன்னிங்ஸில் 657 ரன்கள் குவித்தது.
இதற்கடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஆசாத் மற்றும் இமாம் உல் ஹாக் மற்றும் கேப்டன் பாபர் ஆசம் மூவரும் சதம் அடிக்க, பாகிஸ்தான அணி தனது முதல் இன்னிங்ஸில் 579 ரன்கள் குவித்தது.
இதற்கு அடுத்து முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிசை விளையாடிய இங்கிலாந்து அணி ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக்ஸ் இருவரது அரைசதங்கள் உதவியோடு ஏழு விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுக்க, பேட்டிங்க்கு சாதகமான ஆடுகளத்தில் முன்கூட்டியே அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக 374 ரன்கள் இலக்கு வைத்து டிக்ளேர் செய்தது.
இந்த நிலையில் இங்கிலாந்து முடிவு தவறாக அமையும் போக்கில் தான் ஆட்டமும் சென்று கொண்டிருந்தது. பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளுக்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. மேற்கொண்டு அந்த அணியின் வெற்றிக்கு 86 ரன்கள் தேவை என்ற நிலைதான் இருந்தது. இந்த சூழ்நிலையில் ஓவர்கள் கையில் மீதம் இருந்தும், இங்கிலாந்து அணியின் வேகபந்துவீச்சாளர்கள் ராபின்சன் மற்றும் ஆண்டர்சன் இறுதியில் கலக்கலாக பந்து வீசி, அடுத்த 10 ரன்கள் எடுப்பதற்குள் பாகிஸ்தான் அணியை ஆல் அவுட் செய்து இங்கிலாந்து அணியை வெற்றி பெற வைத்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளத்தில் மிகச் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ராபின்சன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்!