2011 உலகக்கோப்பை போட்டியை இந்திய கிரிக்கெட் இரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். அந்த உலகக்கோப்பையை இந்தியா வென்றது மட்டுமே இதற்கு காரணம் கிடையாது. ஒருவர், தலைமை என்றால் என்னவென்று வகுப்பெடுத்த உலகக்கோப்பை போட்டி அது. அந்த ஒருவர் மகேந்திர சிங் தோனி!
அந்த உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்பான எட்டு போட்டிகளில் மகேந்திர சிங் தோனி அடித்திருந்தது வெறும் 150 ரன்கள். அந்த 150 ரன்களில் ஒரு அரைசதம் கூட கிடையாது. இறுதிப்போட்டிக்கு முன்பான அந்தத் தொடர் முழுவதும், சச்சின், சேவாக், யுவராஜ்சிங், ஜாகீர்கான்தான் இந்திய கிரிக்கெட் அணி இரசிகர்களின் கொண்டாட்டத்தில் இருந்தது. பங்களாதேஷ் உடனான முதல் ஆட்டத்தில் சதம் விளாசி இருந்த, அப்போது இளம் வீரரான விராட்கோலிக்கும் ஒரு சிறு இரசிகர் வட்டம் உருவாகியிருந்தது.
ஆனால் தோனியோ எட்டு ஆட்டங்களின் முடிவில், யாருடைய பெரிய எதிர்பார்ப்பிலும் இல்லாத வீரராகத்தான் பெரும்பான்மை இந்திய இரசிகர்களிடம் இருந்தார். இதற்கெல்லாம் அவரிடம் எந்த சலனமும் ஏற்பட்டிருக்கவில்லை. விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும் அவர் வேலையைக் கவனமாய் செய்தபடி நகர்ந்துகொண்டிருந்தார்.
இந்தச் சூழலில்தான், இறுதிப்போட்டியில் இலங்கை நிர்ணயித்த 275 இலக்கை நோக்கி விளையாடுகையில், இந்திய அணி 114/3 என்று சிக்கலில் இருந்தபோது, சிறப்பான பேட்டிங் பார்மிலிருந்த யுவராஜ் சிங்கிற்கு முன் நம்பர் 5-ல் தோனி இறங்கி விளையாடிதைக் குறித்து, அன்றைய இந்திய அணியின் மனநல பயிற்சியாளர் பாடி அப்டன் சில விசயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.
அதில் அவர் “எம்.எஸ்.தோனி உலகில் சிறந்ததைச் செய்யக்கூடியவர். அவர் இறுதிப்போட்டிக்கு முன் எட்டு ஆட்டங்களில் அவர் பெரிதாய் எதையும் செய்யவில்லை. யுவராஜ் சிறப்பாக எல்லாவற்றையும் செய்திருந்தார். ஆனால் அது தோனிக்கான நேரம். உலகின் பெரிய அழுத்தம் மிகுந்த சூழல்களில் சிறப்பாகச் செயல்படக்கூடியர்கள் ஒரு சிலர்தான். அதில் தோனி ஒருவர். யுவராஜ் சிங் இல்லை” என்று குறிப்பிட்டு உள்ளார்!