பி எஸ் எல் பைனல் – ஒரு ரன்னில் திரில் வெற்றி.. பரபரப்பான ஆட்டத்தில் லாகூர் சாம்பியன்

0
349

பிஎஸ்எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஷாகின் அப்ரிடி தலைமையிலான லாகூர் அணியும் முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் அணிகளும் மோதின. இதில் டாஸ் வென்ற லாகூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர் மிர்சா அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 30 ரன்கள் விளசினார். இதில் 5 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.

- Advertisement -

இதேபோன்று நட்சத்திர வீரர் பக்கர் ஷமான் பொறுப்பாக விளையாடி 34 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். இதனை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சபிக், முல்தான் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். 40 பந்துகளை எதிர்கொண்ட அவர் எட்டு பவுண்டரி, இரண்டு சிக்சர்கள் விளாசி 65 ரன்களை சேர்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம் பில்லிங்க்ஸ், ராசா ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற லாகூர் அணி சரிவை நோக்கி சென்றது.

எனினும் இறுதியில் ஷாகின் அப்ரிடி 15 பந்துகளில் 44 ரன்கள் விளாசினர். இதில் 5 இமாலய சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் லாகூர் அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை சேர்த்தது. இதனை அடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு உடன் முல்தான் அணி களம் இறங்கியது.

இதில் தொடக்க வீரராக உஸ்மான் காணும், கேப்டன் முகமது ரிஸ்வானும் களமிறங்கினர்.  இதில் உஸ்மான் நான்கு பவுண்டரிகளை விரட்டி 12 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இதனை அடுத்து கேப்டன் முகமது ரிஸ்வானும்,  தென்னாப்பிரிக்க வீரர்  ரூசோவ் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

- Advertisement -

பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஸ்வான் 23 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரூசோவ்  32 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். இதில் ஐந்து பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். 12 ஓவர்களில் எல்லாம் 122 ரன்கள் அணி எட்டியதால் முல்தான் அணி ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.

இந்த நிலையில் தான் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொலார்ட் 19 ரன்களிலும் அதிரடி வீரர் டேவிட் 16 ரன்களில் வெளியேற ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதை அடுத்து கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. இதனை ஜமான் கான் வீசினார். களத்தில் குஷ்தில் ஷாவும், அப்பாஸ் அப்ரிடியும் இருந்தனர். இதில் முதல் பந்தில் இரண்டு ரன்கள், இரண்டாவது பந்தில் 1 ரன், மூன்றாவது பந்து டாட் பால் ஆக மாறியது.

இதனால் மூன்று பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நான்காவது பந்தில் ஓவர் த்ரோ காரணமாக இரண்டு ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால் இரண்டு பந்துக்கு எட்டு ரன்கள் என தேவைப்பட்டது. அப்போது ஐந்தாவது பந்தில் குஸ்தில் ஷா பவுண்டரி அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

கடைசி பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜமான்கான் அபாரமாக பந்துவீச அதனை குஷ்தில் ஷா அடித்து இரண்டு ரன்கள் ஓடினார். மூன்றாவது ரன் ஓடி ஆட்டத்தை சமனில் முடிக்கலாம் என முயற்சித்த போது அவர் ரன் அவுட் ஆனார். இதன் காரணமாக லாகூர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சாம்பியன் பட்டத்தை லாகூர் இரண்டாவது முறையாக கைப்பற்றியது.