விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை விட இந்த வீரர் திறமை வாய்ந்தவர் – கௌதம் கம்பீர்

0
80
Gautham Gambhir

பஞ்சாப் கிங்ஸ் அணி நேற்று தன்னுடைய கடைசி லீக் போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, கேஎல் ராகுலின் சூறாவளி பேட்டிங்கால் 13 ஓவர்களிலேயே 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி 14 ஓவர்களுக்குள் சென்னை அணியை வீழ்த்தி விட்டால், புள்ளி பட்டியலில் மும்பை அணியை பின்னுக்குத் தள்ளும் வாய்ப்புள்ளது தெரியவந்தது. கிடைத்த வாய்ப்பை நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணி மிக சிறப்பாக பயன்படுத்திக் கொண்டது. 13 ஓவர்களுக்களிலேயே பஞ்சாப் அணி நேற்று வெற்றி பெற்ற காரணத்தினால், அந்தணியின் நெட் ரன் ரேட் தற்போது அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்த ஆட்டத்தை முன்பே ஆடிருந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றிருக்கலாம்

நேற்றைய போட்டியில் 42 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் என 98 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கே எல் ராகுலை இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் வெகுவாக பாராட்டினார். நேற்று அவர் ஆடிய ஆட்டத்தை தொடர் துவக்கம் முதலே ஆடியிருந்தால், அந்த அணி இந்நேரம் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி அடைந்து இருக்கும் என்றும் கூறினார்.

பஞ்சாப் அணியில் மிடில் ஆர்டர் சரியாக இல்லாத காரணத்தினால் கேஎல் ராகுல் போட்டியை இறுதிவரை கொண்டு வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறார். மேலும் அவர் கேப்டனாக ஒரு சில சமயங்களில் நெருக்கடிக்கும் ஆளாகி தவிக்கிறார். ஆனால் நேற்றைய போட்டியில் அவர் ஆடிய விதம் தான் அவருடைய உண்மையான ஆட்டம். நேற்று தன்னுடைய பொறுப்பை உணர்ந்து அணிக்கு தேவைப்படும் விதத்தில் கன கட்சிதமாக விளையாடினார்.

பஞ்சாப் அணிக்கு கேஎல் ராகுல் இனி வரும் ஐபிஎல் தொடர்களில் இதே போல அதிரடியாக விளையாட வேண்டும். அதுமட்டுமின்றி பஞ்சாப் அணியில் ஒரு சில மாற்றங்களை கண்டிப்பாக செய்தே ஆக வேண்டும். மேலும் எடுத்துச் சொல்வதற்கு பல விஷயங்கள் உள்ளன, ஆனால் அவை அனைத்திற்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் தான் பதிலளிக்க வேண்டும் என்று கம்பீர் கூறி முடித்தார்.

- Advertisement -

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை விட கேஎல் ராகுல் அதிக திறமையுள்ளவர்

மேலும் பேசிய அவர் தற்போது உள்ள இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மத்தியில் கேஎல் ராகுல் சற்று வித்தியாசமான பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார். அவர் அடிக்கும் ஷாட்களை அவ்வளவு எளிதில் மற்ற அனைவரும் அடித்துவிட முடியாது. என்னைப் பொறுத்தவரையில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை விட கேஎல் ராகுல் அதிக திறமை உள்ளவர். இவர்களிடம் இல்லாத தனி குணாதிசயம் கேஎல் ராகுலிடம் உள்ளது.

நேற்றைய ஒரு ஆட்டத்தை மட்டும் வைத்தே நான் இவை அனைத்தையும் பேசவில்லை, அவருடைய பேட்டிங்கை நான் நீண்ட நாட்களாக பார்த்து வருகிறேன். அவரிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன். இனி அவர் ஆடும் அனைத்துப் போட்டிகளிலும், இதே போல அவருடைய இயல்பான அதிரடி ஆட்டத்தை தான் ஆட வேண்டும் என்றும் கௌதம் கம்பீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக அளவில் அனைவரும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர். அவர்கள் இருவரை விட மிகத் திறமை வாய்ந்தவர் கே எல் ராகுல். எனவே இனி கேஎல் ராகுல் தன்னுடைய இயல்பான அதிரடி ஆட்டத்தை இந்த உலகுக்கு வெளிக்காட்டினால், கோலி மற்றும் ரோஹித்தை பற்றிப் புகழ்ந்து பேசும் அனைவரும் கே எல் ராகுலையும் புகழ்ந்து பேசுவார்கள் என்றும் கூறியுள்ளார்.