“இன்னும் சில வருடம் கிரிக்கெட் விளையாட நினைத்தேன். ஆனால்..” – ஓய்வை அறிவித்த பிறகு பொல்லார்ட் பேசியது இதுதான்!

0
8811

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்த கீரன் பொல்லார்ட் பேசியது இதுதான்.

2010ம் ஆண்டில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரை மும்பை அணிக்காக 13 ஆண்டுகள் விளையாடி வந்த கீரன் பொல்லார்ட், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் கடைசி வரை ஒரே அணிக்காக விளையாடிய வெகு சில வீரர்களில் ஒருவர் ஆவார்.

- Advertisement -

நவம்பர் 15ஆம் தேதி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்திருக்கும் கீரன் பொல்லார்ட், தனது கடைசி கடிதத்தில் கண்ணீருடன் பல வார்த்தைகளை பேசியுள்ளார் அதை நாம் இங்கே காண்போம்.

“இன்னும் சில ஆண்டுகள் விளையாட நினைத்தேன். ஆனால் நான் இந்த முடிவை எடுப்பது சற்று கடினமாக தான் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்துடன் நான் பேச்சுவார்த்தை நடத்திய போது, சில விஷயங்களை புரிந்து கொண்டேன்.

அணியில் சில மாற்றங்கள் கொண்டு வந்து எதிர்காலத்தை பலப்படுத்த வேண்டும். அதற்காக இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. நான் வேறு அணியில் விளையாடி இருக்கலாம் ஆனால் ஒருமுறை மும்பை அணிக்கு விளையாடிவிட்டால், எப்போதும் நான் மும்பை இந்தியன்ஸ் வீரர் தான். மும்பை அணிக்கு எதிராக விளையாடுவதை கனவில் கூட என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

- Advertisement -

நான் உணர்வுப்பூர்வமாக பேசவில்லை. ஏனெனில் நான் மும்பை அணியை விட்டு இன்னும் பிரியவில்லை. எனக்கு தற்போது மிகப்பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்பை விட இன்னும் அதிகமாக அதில் செயல்படுவதற்கு ஆவளுடன் காத்திருக்கிறேன்.

மும்பை அணியுடன் பயணித்து ஐந்து முறை கோப்பையை வென்றதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்கும் மேலாக ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமாக இருக்கும் அணியுடன் இணைந்து 13 சீசன்கள் விளையாடியதை நினைக்கும் பொழுது பெருமிதமாகவும் கர்வமாகவும் இருக்கிறது. ஒரு வீரராக இந்த அணியுடன் பயணிப்பதை கண்டிப்பாக நான் மிஸ் செய்வேன். ஆனால் தற்போது அதற்கு மேலான ஒரு இடத்தில் பயணிக்க உள்ளேன். இன்னும் பெரிய ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றுவேன்.

இந்த தருணத்தில் ஒரு வீரராக நான் பயணித்த போது என்னுடன் இருந்த பயிற்ச்சியாளர்கள், மேலாளர்கள் மற்றும் எனது ஹோட்டல் அறையில் எனக்கு உதவியவர்கள் வரை பலருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். சிறியது மற்றும் பெரியது என பங்களிப்பு இல்லாமல் துளிஅளவு பங்களிப்பு கொடுத்த அனைவருக்கும் என்னுடைய இத்தனை ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை நன்றி கடன் பட்டிருக்கிறது.

மேலும் இந்த தருணத்தில் அனைத்திற்கும் மேலாக முகேஷ், நிகிதா மற்றும் ஆகாஷ் அம்பானி ஆகியோர் என்மீது வைத்த அளவற்ற அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் அதீத நம்பிக்கை வைக்கவில்லை என்றால் இத்தனை ஆண்டு காலம் இது சாத்தியமாக இருக்காது. நான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்ததிலிருந்து இப்போது வரை என்னுடைய வீடு போல உணர்வதற்கு இவர்கள் தான் காரணம்.

எனது கிரிக்கெட் மூலம் உங்கள் அனைவரையும் மகிழ்வித்தேன் என நம்புகிறேன். இனி எனது கிரிக்கெட் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளேன். மீண்டும் நான் ஒன்றாக பயணிப்போம்.” என்றார்.