ஐபிஎல் தொடர் மூலம் பணக்காரர்கள் மட்டுமே பயன் அடைகிறார்கள் ; சிறந்த டி20 தொடர் என்றால் அது இதுதான் – டேவிட் லொயிட் சர்ச்சைக் கருத்து

0
82
David Lloyd about IPL Tournament

நம் அனைவருக்கும் ஐ.சி.சி அல்லாது மற்ற கிரிக்கெட் போர்டுகளால் நடத்தப்படும் ட்வென்ட்டி ட்வென்ட்டி போட்டி தொடர்களில் மிகப் பரீட்சமானது ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் 2008ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் மிக முக்கியமான ப்ளே-ஆப்ஸ் சுற்றுப் போட்டிகளில் நாம் இருக்கிறோம்.

ஆனால் ஐ.பி.எல்-க்கு முன்னோடியாக, ஐ.பி.எல்-க்கு முன்பே 2003ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டால் நடத்தப்பட்டு வரும் டி20 பிளாஸ்ட் தொடரை பற்றி நம்மில் பலருக்குத் தெரியாது. இந்தத் தொடர் இங்கிலாந்தின் உள்நாட்டு கவுண்டி அணிகளைக் கொண்டு 2003ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் முதல் தொடரின் சாம்பியன் சர்ரே லயன்ஸ் அணியாகும். இதன் இருபதாவது சீசன் இன்று ஆரம்பிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நாளை மே 25ஆம் தேதி ஆரம்பிக்கும் டி20 பிளாஸ்ட் தொடர் ஜூலை 16ஆம் தேதி வரை நடந்தது முடிகிறது. இத்தொடரில் வியப்பான விசயம் என்னவென்றால் ஒரே நாளில் அதிகப்பட்சமாக எட்டுப் போட்டிகள் வரை நடக்கிறது. அடுத்து மிக முக்கியமான தொடரின் கடைசி நாளான ஜூலை 16ஆம் தேதி இரண்டு அரையிறுதி மற்றும் இறுதிபோட்டி என மொத்தம் மூன்று முக்கியமான போட்டிகளும் ஒரே நாளில் நடக்க இருக்கிறது. உலகில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், வெஸ்ட் இன்டீஸ் என எந்த நாடுகளில் நடத்தப்படும் டி20 போட்டி தொடர்களில், ஒரு நாளுக்கு அதிகபட்சமாய் இரண்டு போட்டிகளுக்கு மேல் நடத்தப்படுவதில்லை. ஆனால் இங்கிலாந்தின் டி20 போட்டி தொடரில் அதிகபட்சமாய் எட்டு ஆட்டங்கள் வரை நடத்தப்படுகிறது.

மொத்தம் 16 அணிகளை எட்டு எட்டு அணிகளாக இரு பிரிவாகப் பிரித்து, ஒவ்வொரு அணிகளும் 14 லீக் போட்டிகளில், ஏழு போட்டிகளில் சொந்த மைதானத்திலும், ஏழு போட்டிகள் வெளி மைதானத்திலும் விளையாடுகின்றன. இதில் இரு பிரிவிலும் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் எட்டு அணிகளைக் கொண்டு காலிறுதி போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் வெல்லும் அணிகளை வைத்து ஜூலை 16ஆம் தேதி இரண்டு அரையிறுதி, இறுதி போட்டி என மூன்று போட்டிகள் அன்றே நடத்தப்படுகிறது. மிக முக்கியமாக நாக்அவுட் போட்டிகள் எல்லாவற்றுக்கும் ரிசர்வ் நாட்கள் உண்டு. மழையால் பாதிக்கப்பட்டால் மறுநாள் போட்டி நடத்தப்படும். ஐ.பி.எல்-ல் இறுதி போட்டிக்கு மட்டுமே ரிசர்வ் நாள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடரையும் ஐ.பி.எல் தொடர்பையும் ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை இங்கிலாந்தின் முன்னாள் வீரரும் பிரபல வர்ணனையாளருமான டேவிட் லாயிட் கூறியிருக்கிறார் அதில் அவர் “நான் ஐ.பி.எல்-ல் பணிபுரிந்தேன் ஆனால் அது ஒரு தனியார் நிறுவனம். மேலும் அது ஏற்கனவே பணக்காரர்களாய் இருப்பவர்களுக்கே நன்மை செய்கிறது. டி20 பிளாஸ்ட் தொடர் மக்களுக்கானது. இதில் பணத்தையும் கொண்டு வருகிறது. ஐ.பி.எல்-ல் விட டி20 பிளாஸ்ட் தொடரே சிறந்தது. நான் தரத்தை வைத்துச் சொல்லவில்லை. நீடித்த இயக்கம் மற்றும் ஆயுட்காலத்தை வைத்துச் சொல்கிறேன். ஐ.பி.எல் இந்திய பார்வையாளர்களை கிரிக்கெட் வீரர்களைக் கடவுகளாகப் பார்க்க வைக்கிறது. இது ஆபத்தான போக்கு” என்று தெரிவித்திருக்கிறார்!

- Advertisement -