உலகம் கண்டிராத த்ரில் ஆட்டத்தில் இந்தியா வெற்றி; கிங் கோலி அசத்தல்!

0
3954
Viratkohli

எட்டாவது டி20 உலக கோப்பையில் பிரதான சுற்றில் இரண்டாவது நாளான இன்று இந்தியா பாகிஸ்தான் மோதிய போட்டி ஒன்று உலகம் இதுவரை கண்டிராத திருப்பங்களோடு நடந்து முடிந்திருக்கிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். பாகிஸ்தான் துவக்க ஆட்டக்காரர்கள் பாபர் மற்றும் ரிஸ்வான் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

- Advertisement -

ஆனால் இதற்கடுத்து ஜோடி சேர்ந்த ஷான் மசூத் மற்றும் இப்திகார் இருவரும் மிகச்சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 159 ரன்கள் எடுத்தது. அர்ஸ்தீப் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

இதற்கு அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது ரோகித் சர்மா கேஎல் ராகுல் சூர்யகுமார் யாதவ் அக்சர் படேல் என நான்குபேர் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய அணி பெரிய நெருக்கடியில் சிக்கியது.

இதற்கடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இந்திய அணியை 10 ஓவர்களுக்கு 45 ரன்கள் என்று கொண்டு சென்றார்கள். இதற்கு அடுத்த பத்து ஓவர்களில் ஓவருக்கு 11 ரன்களுக்கு மேல் தேவைப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் இருவரும் சேர்ந்து மிகச் சிறப்பாக விளையாடி 100 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். கடைசி ஐந்து ஓவர்களுக்கு 60 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. இதற்கு அடுத்து மூன்று ஓவர்களுக்கு நாற்பத்தி எட்டு ரன்கள் தேவை என்ற நிலைக்கு வந்தது. கடைசி இரண்டு ஓவர்களுக்கு முப்பத்தி ஒரு ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. இறுதியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த ஓவர் தான் இதுவரை உலகம் கண்டிராத ஒரு திரில் ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்களுக்கு தந்தது. விராட் கோலி ஒரு நோ பாலில் சிக்ஸர் அடிக்க, அதற்கான பிரி ஹிட் பாலில் அவர் போல்ட் ஆகி விக்கெட் கீப்பர் பை மூலம் 3 ரன்கள் வர, கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் என்ற சூழ்நிலையில், தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்க, ஒரு பந்துக்கு 2 ரன்கள் என்ற தேவையில், ஒரு வைட் வீசப்பட, அஸ்வின் கடைசி பந்தில் ஒரு ரன் அடிக்க இந்திய அணி வெற்றி பெற்றது.

இதுவரை நடந்த கிரிக்கெட் போட்டிகளில் இதற்கு ஈடான திருப்பங்கள் நிறைந்த போட்டி இதுவரை நடந்ததில்லை என்றே கூறலாம். 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட திருப்பங்களுக்கு ஈடானது, இல்லை இன்னும் கொஞ்சம் அதிகமானது இந்தப் போட்டி என்றே கூறலாம். இறுதிவரை களத்தில் நின்ற விராட்கோலி 53 பந்துகளில் 82 ரன்களை 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களுடன் அடித்தார். விராட் கோலியை ஏன் கிங் என்று அழைக்கிறார்கள் என்று நிரூபித்தார். அவரே ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்!