டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறவில்லை என்றால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் – ரிக்கி பாண்டிங் காட்டம்

0
155
Virat Kohli and Ricky Ponting

இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெற வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து விவாதத்திற்கு ரிக்கி பாண்டிங் பதில் அளித்துள்ளார்.

இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றிலும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்து வரும் விராட் கோலி, 450-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடி சுமார் 25,000 அதிகமான ரன்களை அடித்திருக்கிறார். இதில் 70 சதங்கள் அடங்கும். அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங் உடன் சேர்ந்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு, சர்வதேச அரங்கில் விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. சில முக்கியமான போட்டிகளிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் அவரது இயல்பான சராசரி 50க்கும் மேல். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக சராசரி 30 இருக்கும் கீழே உள்ளது. விராட் கோலி பழைய பார்மிற்கு திரும்பி வருவதற்கு சில காலம் ஓய்வு தேவை. அதனால் அவரை அணியிலிருந்து வெளியே அமர்த்தி மீண்டும் பார்மிற்கு வந்த பிறகு அணிக்குள் சேர்க்கலாம் என்று ரசிகர்களே கூறும் அளவிற்கு தற்போது விராட் கோலியின் பேட்டிங் இருந்து வருகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஒரு அரைசதம் கூட அவர் அடிக்கவில்லை. இந்நிலையில் வருகிற உலக கோப்பை தொடரில் விராட் கோலி இடம்பெற வேண்டுமா? அல்லது அவரை நீக்கி வேறு ஒரு வீரரை அந்த இடத்திற்கு கொண்டு வர வேண்டுமா? என்ற விவாதங்கள் நிலவி வருகிறது. இதற்கு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.

“பிசிசிஐ விராட் கோலியை வெளியில் அமர்த்துவதற்கு பதிலாக வேறொரு வழிமுறையை கண்டறிந்து அதனை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் விராட் கோலி போன்ற வீரர் அணிக்குள் இருப்பது வீரர்கள் மத்தியில் மனதளவில் மிகுந்த நம்பிக்கை கொடுக்கும். விராட் கோலி இடத்தை இங்கும் அங்குமாக மாற்றி அமைக்காமல் அவருக்கு சரியான இடம் இதுதான், அந்த இடத்தில் நீங்கள் நிச்சயம் ஆட வேண்டும் என்று உறுதிப்பட கூற வேண்டும். நான் அவருக்கு பயிற்சியாளராக இருந்தால் தெளிவாக அவரது இடம் இதுதான் என்று நம்பிக்கை அளித்து விடுவேன் அல்லது சில போட்டிகளில் ஓபன் செய்யவும் அழைப்பேன்.

- Advertisement -

ஐபிஎல் போட்டிகளில் பலமுறை துவக்க வீரராக களம் இறங்கி விராட் கோலி நன்றாக விளையாடியிருக்கிறார். சில போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கி ரன்களை குவித்து நம்பிக்கை பெற்ற பிறகு, மீண்டும் மூன்றாவது வீரராகவே களம் இறக்கலாம். பலமுறை ஐசிசி போட்டிகளை விளையாடிய அனுபவமிக்க வீரரை சமீபத்திய பேட்டிங் வைத்து வெளியில் அமர்த்துவது சரியாக இருக்காது. நிச்சயம் அவரை பழைய பார்மிற்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் செய்ய வேண்டும். அதுதான் இப்போது சரியான முடிவாகவும் இருக்கும்.” என்றார்.