கேப்டன்ஷிப்பில் நான் யாரையும் பின்பற்ற விரும்பவில்லை – கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா அதிரடி பேட்டி!

0
251
Nithish Rana

டெல்லி மாநில அணிக்கு கேப்டனாக இருக்கும் 29 வயதான இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் வலதுகை சுழற் பந்துவீச்சாளர் நிதிஷ் ராணா தற்பொழுது ஐபிஎல் தொடரில் தான் அங்கம் வகிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் வாங்கப்பட்டு கேப்டனாக செயலாற்றிய ஸ்ரேயாஸ், இந்த முறை முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருப்பதால், 2018 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் நிதிஷ் ரானா கேப்டனாக நேற்று அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் இறக்கப்பட்டாலும் அதிரடியாக விளையாடக் கூடிய இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 361 ரன்களை 144 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்தார். மேலும் இந்திய அணிக்காகவும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமாகி விளையாடியிருக்கிறார்.

தனக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டிருப்பது குறித்து பேசி உள்ள நிதிஷ் ராணா “இதில் நான் யாரையும் பின்பற்ற விரும்பவில்லை. நான் என் வழியில் வழி நடத்தவே விரும்புகிறேன். நான் யாரையாவது பின்பற்ற நினைத்தால் எங்காவது நான் என்னை இழந்து விடுவேன். எனது பாணியில் அணியை முன்னோக்கி கொண்டு செல்ல ஆசைப்படுகிறேன். நான் பல கேப்டன்களின் கீழ் விளையாடி உள்ளேன். கம்பீர்,இயான் மோர்கன், தினேஷ் கார்த்திக் மற்றும் ஸ்ரேயாஸ் தலைமையின் கீழும் விளையாடியிருக்கிறேன். நான் தாதா கேப்டன்சி கீழ் விளையாடவில்லை. ஆனால் அவர் இந்திய கிரிக்கெட்டை எடுத்துச் சென்ற தூரம் நமக்குத் தெரியும். எனக்கு என்று ஒரு ஸ்டைல் இருக்கிறது. கொஞ்சம் பொறுங்கள் உங்களுக்கு தெரிய வரும்!” என்று கூறியுள்ளார்.

மேலும் வெளிப்படையாக பேசிய அவர்
” பொறுப்பு என்பது இங்கே வெளிப்படையாக எனக்கு இருக்கிறது. நான் பொறுப்பேற்க விரும்புகிறேன். ஸ்ரேயாஸ்க்கு ஏற்பட்ட நிலைமை துரதிஷ்டவசமானது. அவர் எங்கள் அணியின் மூத்த மற்றும் முக்கிய வீரர். நாங்கள் ஒட்டுமொத்த சூழ்நிலையின் எடுத்து வைத்து பார்த்து புரிந்து இருக்கிறோம். அதே சமயத்தில் ஒருபுறம் அணி நன்றாகவே இருக்கிறது. மேலும் நான் தற்பொழுது விளையாடி வரும் இடத்தில் இரண்டு மூன்று வருடங்களாக இருந்து வருகிறேன். ஒரே வித்தியாசம் என்னவென்றால் இந்த முறை எனக்கு கேப்டன் பதவி கிடைத்திருக்கிறது. கேப்டன் பதவிக்காக நான் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டால் அது எனது ஆட்டத்தை பாதிக்கும் நான் அவ்வாறு செய்ய மாட்டேன்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசி உள்ள நிதிஷ் ராணா “உள்நாட்டுப் போட்டிகளின் நிலைமைகள் கடினமானதுதான். ஆனால் நிலை உயர உயர கடினங்களும் அதிகமாகும். இந்த வகையில் ஐபிஎல் தொடரில் நிர்வாகம் என்பது பெரிய விஷயம். எங்கள் மூத்த வீரர்களை பாருங்கள் ஆண்ட்ரே ரசல் 400, 450 போட்டிகள் விளையாடி இருக்கிறார். அவரைப்போலவே சுனில் நரைனும் இருக்கிறார். இப்படியான அனுபவ வீரர்களிடமிருந்து உதவியை பெற்றுக் கொள்வது நல்லது!” என்று தெரிவித்திருக்கிறார்!